தமிழ்நாடு அரசியல் கட்சிகள் கூட்டங்கள் மற்றும் ரோடு ஷோக்கள் நடத்துவது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கக் கோரிய வழக்கில் உயர் நீதிமன்றம் இன்று (டிச. 19) தீர்ப்பு வழங்குகிறது.
கரூரில் கடந்த செப்டம்பர் மாதம் 27ம் தேதி நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தையடுத்து, அரசியல் கட்சிகள் கூட்டங்கள் மற்றும் ரோடு ஷோக்கள் நடத்துவதற்கு வழிகாட்டு நெறிமுறைகளை ஏற்படுத்த வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளுடன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அரசியல் கட்சிகள் கூட்டங்கள் மற்றும் ரோடு ஷோக்கள் நடத்துவதற்கு வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டது. இதனையடுத்து, பல்வேறு அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்திய தமிழ்நாடு அரசு, வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கியது. அதனை சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சமர்ப்பித்தது.
இந்த வரைவு வழிகாட்டு நெறிமுறையில் அரசு விதித்துள்ள நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகள் ஜனநாயகத்துக்கு விரோதமாக இருப்பதாக அதிமுக மற்றும் தவெக பதில் மனுக்களை தாக்கல் செய்தன. இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்சவா, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் கொண்ட அமர்வு, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தது. இந்தநிலையில், தமிழ்நாடு அரசியல் கட்சிகள் கூட்டங்கள் மற்றும் ரோடு ஷோக்கள் நடத்துவது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கக் கோரிய வழக்கின் தீர்ப்பை இன்று (டிச. 19) நீதிபதிகள் பிறப்பிக்க உள்ளனர்.
