பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தை வரும் 8ம் தேதி ஆலந்தூர் நசரத்பேட்டையில் உள்ள நியாய விலைக் கடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார்.

பொங்கல் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசின் நலத் திட்ட உதவிகளுடன் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக, தமிழகத்தின் 2 கோடியே 22 லட்சத்து 91 ஆயிரத்து 730 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கும், இந்த ஆண்டும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது.

இதற்காக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு வழங்கப்படுவதுடன், இதற்கு ரூ.248 கோடியே 66 லட்சத்து 17 ஆயிரத்து 959 நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

இதனுடன் கூடுதலாக, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3,000 ரொக்கப் பரிசாக வழங்கப்படும் என தமிழ்நாடு அரசின் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு, பொங்கல் பரிசுத்தொகுப்பும், ரொக்கப் பரிசும் சேர்த்து மொத்தம் ரூ.6,936 கோடியே 17 லட்சத்து 47 ஆயிரத்து 959 செலவில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இதற்கான டோக்கன் விநியோகம் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் வழங்கப்பட்டு வரும் நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தை வரும் 8ம் தேதி ஆலந்தூர் நசரத்பேட்டையில் உள்ள நியாய விலை கடையில்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் நடைபெற உள்ள நிலையில் வரும் 9,10, 11 ஆகிய தேதிகளிலும் நியாய விலை கடை முழுமையாக செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வழக்கமான விடுமுறை நாளான ஜன.9ம் தேதி வெள்ளிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது, இதற்கு பதிலாக பிப்.7ல் விடுமுறை அளிக்கப்படும் என்று உணவு வழங்கல் துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version