முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான ‘தமிழக வெற்றிக் கழகம்’ கூட்டணி அரசு, தனது அமைச்சரவையை அதிரடியாக விரிவுபடுத்தியுள்ளது. இந்த விரிவாக்கத்தின் மூலம், புதிய கூட்டணி அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சிக்கு 2 அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம், கடந்த 1967-ஆம் ஆண்டிற்குப் பிறகு (சுமார் 59 ஆண்டுகள் கழித்து) தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி நேரடியாக ஆட்சி அதிகாரத்தில் பங்குகொள்கிறது என்பது அரசியல் வரலாற்றில் மிக முக்கியப் மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

தவெக அமைச்சரவையில் எஸ். ராஜேஷ்குமார் (கிள்ளியூர் தொகுதி), பி. விஸ்வநாதன் (மேலூர் தொகுதி) ஆகியோர் காங்கிரஸ் கட்சி சார்பில் இடம்பெறும் இரு அமைச்சர்கள் ஆவர்.

முதலமைச்சர் விஜய் கடந்த மே 10 அன்று பொறுப்பேற்றபோது, முதற்கட்டமாக அவருடன் சேர்த்து 10 அமைச்சர்கள் மட்டுமே பதவியேற்றனர். அப்போது 22-க்கும் மேற்பட்ட முக்கியத் துறைகள் யாருக்கும் ஒதுக்கப்படாமல் முதலமைச்சரின் கட்டுப்பாட்டிலேயே வைக்கப்பட்டிருந்தன.

தற்போது ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மேலும் 23 புதிய அமைச்சர்கள் (காங்கிரஸ் கட்சியின் 2 பேர் உட்பட) இன்று பதவியேற்கின்றனர். இதன் மூலம் முதலமைச்சரையும் சேர்த்து தமிழக அமைச்சரவையின் மொத்த எண்ணிக்கை 33 ஆக முழுமையடைகிறது.

அமைச்சரவையில் காங்கிரஸ் இடம் பிடித்தது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கிரிஷ் சோடங்கர், காங்கிரஸ் நிர்வாகிகளின் கடுமையான உழைப்பிற்கு கிடைத்த பரிசு அமைச்சரவையில் இரண்டு காங்கிரஸ் உறுப்பினர்கள் இடம் பெறுவது. முன்னாள் முதலமைச்சர் காமராஜர் வழியில் எங்களது உறுப்பினர்கள் செயல்படுவார்கள்.

நாங்கள் தமிழ்நாடு மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்று அமைச்சரவையில் இடம் பெறுகிறோம் நாங்கள் யாருக்கும் துரோகம் செய்யவில்லை. மதவாத சக்திகள் தமிழ்நாட்டிற்குள் நுழைவதை தடுப்பதற்காகவே அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளோம் என்றார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version