நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள பாலம் வயல் கிராமத்தில், நேற்று இரவு காட்டு யானை ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து அட்டகாசம் செய்த சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று இரவு உணவைத் தேடி கிராமத்திற்குள் நுழைந்த காட்டு யானை, பாலம் வயல் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் வளாகத்திற்குள் சென்றது. அங்கு செடி, கொடிகளை உண்டு கொண்டிருந்தது. யானையின் சத்தத்தைக் கேட்டு விழித்துக்கொண்ட வீட்டின் உரிமையாளர்கள், டார்ச் லைட் அடித்து சத்தம் போட்டனர். இதனால் ஆக்ரோஷமடைந்த யானை, வீட்டின் கேட்டை வலுக்கட்டாயமாக இடித்துத் தள்ளிவிட்டு வெளியேறியது.
கூடலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். யானை ஊருக்குள் வருவதால் இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வரக்கூட அஞ்சும் சூழல் நிலவுகிறது.
தங்கள் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு கோரி, குடியிருப்பு பகுதிகளுக்குள் புகும் காட்டு யானைகளை வனத்துறையினர் உடனடியாகக் கண்காணித்து, அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
