ஆளுநர் உரையில் புதிதாக எந்த திட்டங்களும் இடம்பெறவில்லை என எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
சென்னை: சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மாநில ஆளுநர் உரையில் எதிர்பார்த்த புதிய அறிவிப்புகள் இல்லாததால் ஏமாற்றம் அடைந்ததாக தெரிவித்தார். தவெக அரசின் முதல் கவர்னர் உரையில் புதிய திட்டங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்றும், வெள்ளை அறிக்கையில் உள்ளவை மட்டுமே திருப்பிக் கூறப்பட்டுள்ளதாகவும் விமர்சித்தார். “கவர்னர் ஆற்றிய உரையில் மாற்றங்களை எதிர்பார்த்தோம். புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும் என்று நம்பிய மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து கடுமையாக விமர்சித்த அவர், “சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தவெக ஆட்சி அமைந்த பிறகு வெறும் 38 நாட்களில் மட்டும் 150 சிறுமிகளுக்கு பாலியல் கொடுமைகளும், 130 கொலைகளும் நடைபெற்றுள்ளன. சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் என்ற வாக்குறுதி என்ன ஆனது? பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம் என்ற வாக்குறுதி எங்கே சென்றது?” என்று கேள்வி எழுப்பினார். இந்தக் காலகட்டத்தில் பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான குற்றங்கள் அதிகரித்துள்ளதாகவும், அரசு இதனைத் தடுக்க தவறிவிட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். மக்கள் எதிர்பார்க்கும் அடிப்படை பாதுகாப்பு கூட இல்லாத நிலை உருவாகியுள்ளதாக எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.
மேலும், தனது மகன் மிதுன் அரசியலுக்கு வருவதாக சமீப நாட்களில் ஊடகங்களில் வெளியான செய்திகளை முற்றிலுமாக மறுத்தார். “எனது மகன் அரசியலுக்கு வர உள்ளதாக சில தினங்களாக செய்திகள் வருகின்றன. இது தவறான தகவல். அவர் அதிமுகவில் அடிப்படை உறுப்பினராக மட்டுமே உள்ளார். கட்சியின் எந்த பதவியிலும் இல்லை. எனது மகன் மிதுன் அரசியலுக்கு வரமாட்டார் என்பதை திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெளிவுபடுத்தினார்.
எதிர்க்கட்சித் தலைவராக உள்ள எடப்பாடி பழனிசாமி, தவெக அரசின் செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறார். சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது எழுப்பப்படும் முக்கிய பிரச்னைகளில் சட்டம் ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்டவை முன்னிலைப் படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுகவினர் இந்த விவகாரங்களை சட்டசபையில் வலுவாக முன்வைக்க தயாராகி வருவதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தக் கருத்துகள் தமிழக அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தவெக அரசு தனது முதல் கவர்னர் உரையின் மூலம் மக்களுக்கு நம்பிக்கை அளிக்கத் தவறியதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன.
