முதியோருக்கு மரியாதையுடனும், மனிதநேயத்துடனும் பராமரிப்பு வழங்குவது சமூகத்தின் ஒட்டுமொத்த பொறுப்பாகும் என தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை, வளசரவாக்கத்தில் அமைந்துள்ள அதுல்யா முதியோர் சிறப்பு சிகிச்சை மருத்துவமனையை ஆளுநர் அர்லேகர் திறந்து வைத்தார். இவ்விழாவில் உரையாற்றிய ஆளுநர், முதியோர் சுகாதார சேவை என்பது மருத்துவ வசதிகள் மற்றும் தொழில்நுட்பத்தைத் தாண்டி, கருணை, மரியாதை மற்றும் மனிதநேயத்தை சமமாகக் கவனிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
இந்தியாவில் வேகமாக அதிகரித்து வரும் முதியோர் மக்கள்தொகையை கருத்தில்கொண்டு , சிறப்பு முதியோர் சிகிச்சை சேவைகளின் தேவையை அவர் எடுத்துரைத்ததுடன், சுகாதார அடித்தளத்தை மேலும் வலுப்படுத்த வேண்டியதையும் குறிப்பிட்டார்.
முதியோரின் உடல் மற்றும் செயல்பாட்டு தேவைகளுக்கு ஏற்ப ஒருங்கிணைந்த மருத்துவ சேவைகளை வழங்கும் அதுல்யா சீனியர் கேர் நிறுவனத்தின் முயற்சியை ஆளுநர் அவர்கள் பாராட்டினார்.
மேலும், முதியோருக்கு மரியாதையுடனும், மனிதநேயத்துடனும் பராமரிப்பு வழங்குவது சமூகத்தின் ஒட்டுமொத்த பொறுப்பாகும் என ஆளுநர் வலியுறுத்தினார்.
