நடிகர் கமல்ஹாசன் தமிழிலிருந்துதான் கன்னடம் பிறந்தது என்று கூறியதை அடுத்து கர்நாடகத்தில் அவருக்கு எதிராக போராட்டங்கள் வெடித்துள்ளன. கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ் மொழியின் தொன்மையை உலகமே ஏற்றுக்கொண்டிருக்கும் நிலையில், இது குறித்த தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்குவது கண்டிக்கத்தக்கது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவருடைய எக்ஸ் தள பதிவில், “உலகின் பழமையான மொழிகளாக லத்தீன், கிரேக்கம், ஹீப்ரு, சமஸ்கிருதம், அரபி, மாண்டரின் ஆகியவை அறியப்படுகின்றன. ஆனால், இந்த மொழிகள் அனைத்தையும் விட அன்னை தமிழ் தான் மூத்த மொழி. தமிழிலிருந்தும் தான் பிற திராவிட மொழிகள் பிறந்தன என்பது மொழி ஆராய்ச்சியாளர்களால் நிரூபிக்கப்பட்ட உண்மை. “தாயை விட மகள் மூத்தவராக இருக்க முடியாது. இதன் மீது எவரும் வினா எழுப்ப முடியாது.” எனக் கூறியுள்ளார்.
இதையும் படிக்க: மநீம சார்பில் கமல் போட்டி… திமுக கூட்டணி கட்சிகள் ஆதரவு தர வேண்டுகோள்..
மேலும், “கன்னட மொழிக்கு பல சிறப்புகள் இருப்பதை மறுக்க முடியாது. 2004 ஆம் ஆண்டில் தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட நிலையில், கன்னடமும், தெலுங்கும் 2008 ஆம் ஆண்டில் செம்மொழியாக அறிவிக்கப்பட்டன. எனவே, அனைத்து மொழிகளும் அவற்றின் பழமை, இலக்கியச் செழுமைக்காக போற்றப்பட வேண்டும். அதை விடுத்து மொழிகளை அடிப்படையாகக் கொண்ட சர்ச்சைகள் தவிர்க்கப்பட வேண்டும்.” என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.