தேசிய சின்னத்தை தவறாகப் பயன்படுத்தி நிரந்தர வைப்பீடுகள் வசூலிக்கப்பட்டதாக திருவள்ளுவர் போக்குவரத்து கழக தொழிலாளர்கள் கூட்டுறவு கடன் சங்கத்துக்கு எதிரான புகார் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த திலகவதி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், தான் உறுப்பினராக இருக்கும், தனியார் கூட்டுறவு சங்கமான திருவள்ளுவர் போக்குவரத்கது கழக தொழிலாளர்கள் கூட்டுறவு கடன் சங்கம், அனுமதியின்றி இந்தியா தேசிய சின்னத்தை தவறாக பயன்படுத்தி 500 கோடி ரூபாய் அளவுக்கு நிரந்தர வைப்பீடுகளை வசூலித்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.
இது சம்பந்தமாக, கிளாம்பாக்கம் காவல் நிலையத்திலும், லஞ்ச ஒழிப்புத் துறையிடமும், கடந்த ஜூன் 12 ஆம் தேதி புகார் அளித்த நிலையில், தேசிய சின்னத்தை மட்டும் அகற்றி உள்ளதாகவும், நிரந்த வைப்பீடுகளை வசூலித்த கூட்டுறவு சங்கத்தின் செயலாளர் ஜெயசங்கர் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்பதால், தனது புகார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரின் புகார் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளருக்கு விசாரணைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இது சம்பந்தமாக ஆரம்பகட்ட விசாரணை நடத்தில் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு 4 வாரங்களில் அறிக்கை அளிக்க வேண்டும் என கூட்டுறவு சங்கங்களின் பதிவாளருக்கு உத்தரவிட்ட நீதிபதி, அறிக்கை பெற்ற பிறகு தேவைப்பட்டால் குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும், கிளாம்பாக்கம் காவல் நிலையத்தில் மனுதாரர் அளித்த புகாரில் விசாரணை நடத்தி 2 வாரங்களில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
