கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய கோரிய மனுவுக்கு நவம்பர் 24ம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி தமிழக அரசு, மாவட்ட நிர்வாகம் மற்றும் டிஜிபிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புகழ்பெற்ற திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா டிசம்பர் 3ம் தேதி நடைபெற உள்ளது. விழாவை முன்னிட்டு, அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வர் என்பதால், நெரிசல் சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், போதுமான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், கூட்டத்தை கட்டுப்படுத்தவும், முறைப்படுத்தவும் போதுமான காவல்துறையினரை பணியில் அமர்த்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி கூட்டத்தை கண்காணிக்க வேண்டும், வாகன போக்குவரத்தை முறைப்படுத்த வேண்டும், வாகனம் நிறுத்துவதற்கு போதுமான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும், மருத்துவ வசதிகள் வழங்க தற்காலிக முகாம்கள் அமைக்க வேண்டும் போன்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல கிரிவலப்பாதையில் போலி சாமியார்கள், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகளை அனுமதிக்கக் கூடாது என்றும், கடைகள் அமைக்க அனுமதிக்கக் கூடாது என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.
கோயிலில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அறிக்கைத் தாக்கல் செய்ய மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.பி.பாலாஜி, தமிழக அரசு, திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம், காவல்துறை ஆகியோர் நவம்பர் 24ம் தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார்.
