தங்களை என்டிஏ கூட்டணிக்கு வருமாறு யாரும் அழைக்கவில்லை எனவும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

அதிமுக தலைமையிலான பாஜக கூட்டணியை இறுதி செய்யும் வேலையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஈடுபட்டு வருகிறது. அதற்காக மத்திய அமைச்சரும் பாஜக தமிழ்நாடு தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் தமிழ்நாட்டில் தீவிர ஆலோசனையை மேற்கொண்டு வருகிறார். இப்படியிருக்கையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக இன்று இணைந்துள்ளது. இது தமிழக அரசியலிலும் திமுக கூட்டணியிலும் சற்று பயத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் பாஜக கூட்டணியில் தேமுதிகவை இணைக்க பேச்சுவார்த்தைகள் நடந்துவருவதாக கூறப்பட்டது.

ஆனால், இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், கூட்டணி விவகாரம் தொடர்பாக நான் ஏற்கனவே பலமுறை விளக்கம் அளித்துவிட்டேன். இந்த விஷயத்தில் எங்கள் கட்சி தொண்டர்களைவிட பத்திரிகையாளர்களே அதிக ஆர்வம் காட்டுகின்றனர். தேசிய ஜனநாயகக் கூட்டணி குறித்து எங்களுக்கு எந்தவித அழைப்பும் வரவில்லை. யாரும் நேரிலோ, தொலைபேசியிலோ எங்களை தொடர்புகொள்ளவில்லை.

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் என்னுடன் பேசவில்லை. அவர் ஏன் தமிழ்நாட்டுக்கு வந்தார் என்பதுகூட எனக்குத் தெரியாது. பிரதமர் மோடி 23ஆம் தேதி வருகிறார் என்பதையும் செய்திகளில் பார்த்துதான் அறிந்தேன். அது எந்த நிகழ்ச்சி என்பதும் எனக்குத் தெரியாது. கூட்டணி தொடர்பான எந்த முடிவையும் நாங்களே அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம். இதுபோன்று தவறான தகவல்களை யார் பரப்புகிறார்கள் என்று புரியவில்லை. தற்போது நான் கட்சி அலுவலகத்தில்தான் இருக்கிறேன். இந்த நிமிடம் வரை அதிமுக–பாஜக கூட்டணி குறித்து எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை” என்று அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், அரசியல் என்பது மக்களுக்கானது தான். மதுரையில் எல்ஐசி அதிகாரியாக பணியாற்றிய கல்யாணி என்பவரை, அவருடன் வேலை பார்த்த ராமகிருஷ்ணன் கொடூரமாக கொலை செய்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தவறை சுட்டிக்காட்டியதற்காக பெட்ரோல் ஊற்றி எரித்தது மனிதாபிமானத்திற்கு முற்றிலும் எதிரான செயல். இதனை எவரும் ஏற்றுக்கொள்ள முடியாது; அனைவரும் ஒன்றிணைந்து இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.

இன்றைய காலகட்டத்தில் பெண்கள் அனைத்து துறைகளிலும் முன்னேறி வருகின்றனர். ஆனால் இதுபோன்ற சம்பவங்கள் பெண்களின் பாதுகாப்பு குறித்து பெரிய கேள்விக்குறியை எழுப்புகின்றன. குற்றவாளியான ராமகிருஷ்ணனுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட வேண்டும். அதுவும், மற்றவர்களுக்கு எச்சரிக்கையாக அமையும் வகையில் மிகக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும். மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது அரசின் முதன்மை கடமை. மேலும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் பழக்கத்தை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

மேலும், கள்ளக்குறிச்சி திருவிழாவில் சிலிண்டர் வெடித்து மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் மிகவும் வேதனையளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு இழப்பீடு வழங்கியுள்ளது சிறிய ஆறுதலாக உள்ளது. அந்த குடும்பங்களுக்கு தேமுதிக சார்பிலும் நாங்கள் அஞ்சலி செலுத்தியுள்ளோம் என்றும் கூறினார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version