நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு நான்கு வாரங்களுக்குள் புதிய பாஸ்போர்ட் வழங்கும்படி, மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
தனது பாஸ்போர்ட் தொலைந்துவிட்டதாகவும், வெளிநாடு செல்வதற்காக தேடியபோது அது கிடைக்கவில்லை என்றும், பல முயற்சிகளுக்குப் பிறகும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் சீமான் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். புதிய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்தபோது, அவர் மீதான நிலுவையிலுள்ள குற்ற வழக்குகளைக் காரணம் காட்டி அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. புதிய பாஸ்போர்ட் வழங்கக் கோரிய தனது விண்ணப்பத்தை நிராகரித்த உத்தரவை ரத்து செய்து, தனக்கு பாஸ்போர்ட் வழங்க உத்தரவிட வேண்டும் என அவர் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தபோது, சீமான் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சங்கர், இந்த வழக்குகள் அரசியல் காரணங்களுக்காகப் பதிவு செய்யப்பட்டவை என்றும், எனவே புதிய பாஸ்போர்ட் வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் வாதிட்டார்.
மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், சீமானின் புதிய பாஸ்போர்ட் விண்ணப்பத்தைப் பரிசீலித்து, நான்கு வாரங்களுக்குள் பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.