2019ம் ஆண்டு தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நீதிபதி நந்தினி தேவி வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு வழங்கியுள்ளார். இந்நிலையில் இந்த வழக்கு கடந்து வந்த பாதை மற்றும் நீதிபதி வழங்கிய தீர்ப்பின் விவரங்களை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்…
பொள்ளாச்சி வழக்கு – கடந்து வந்த பாதை கடந்த 2019ம் ஆண்டு இளம் பெண்கள் மற்றும் மாணவர்களை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த சம்பவம் தொடர்பாக 2019ம் ஆண்டு பிப்ரவரி 12ம் தேதி பெண் ஒருவர் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் பெண் ஒருவர் புகார் கொடுத்தன் பேரில் சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து 2019 மார்ச் 5ம் தேதி தலைமறைவாக இருந்து வீடியோ பதிவு வெளியிட்ட திருநாவுக்கரசு கைது செய்யப்பட்டார். அவரது செல்போனில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் பதியப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு மார்ச் மாதம் இறுதியில் iந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது.
பின்னர் ஏப்ரல் 25ம் தேதி சி.பி.ஐ.க்கு வழக்கு மாற்றப்பட்டது. குற்றவாளிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்கள், லேப்டாப்களில் இருந்து கைப்பற்றப்பட்ட வீடியோக்கள் மின்னணு ஆதார ஆவணங்களாக பதிவு செய்யப்பட்டன.இதனடிப்படையில், மே மாதம் 24ம் தேதி பாலியல் துன்புறுத்தலில் பாதிக்கப்பட்ட 20 பெண்களிடம் இருந்து பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில், குற்றவாளிகள் சபரிராஜன், சதீஷ்குமார், வசந்தராஜன், திருநாவுக்கரசு, மணிவண்ணன் ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
பின்னர் 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் 6ம் தேதி இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த அருளானந்தம், ஹெரன்பால், பாபு ஆகியோரை சி.பி.ஐ. கைது செய்தது. 3 பேரும் அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள் என்று கூறப்பட்டதால் அரசியல் அரங்கில் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து பிப்ரவரி 22ம் தேதி அருளானந்தம், ஹெரன்பால், பாபு ஆகியோர் மீது 2-வது கூடுதல் குற்றப்பத்திரிகை கோவை மகளிர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
ஆகஸ்ட் 16ம் தேதி 9-வது குற்றவாளியான அருண்குமார் கைது செய்யப்பட்டு, அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
2024 பிப்ரவரி 23ம் தேதி சி.பி.ஐ. கூடுதல் ஆதாரங்களை சமர்ப்பித்த நிலையில் 9 குற்றவாளிகளும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். குற்றவாளிகள் 9 பேர் மீது தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் 76 விதமான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. அரசு தரப்பில் 205 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டன. குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் இருந்து 12 ஆவணங்கள் குறிக்கப்பட்டன. 11 ஆவணங்களை நீதிமன்றமே தானாக எடுத்துக்கொண்டது. குற்றவாளிகளிடம் கைப்பற்றப்பட்ட செல்போன்கள், லேப்டாப், ஹார்டு டிஸ்க் உள்பட 30 பொருட்கள் ஆதாரமாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட பெண்களும், 48 சாட்சியாக இறுதிவரை பிறழ்சாட்சியாக மாறவில்லை. மொத்தம் 1500 பக்கங்களில் குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ. தாக்கல் செய்தது. சாட்சிகளிடம் 236 கேள்விகள் கேட்கப்பட்டு அவை பதிவு செய்யப்பட்டன.
2025 ஏப்ரல் 5ம் தேதி குற்றம்சாட்டப்பட்ட 9 பேரிடம் கேள்விகள் கேட்பதற்காக கோவை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். 2025 ஏப்ரல் 28ம் தேதி இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் மே மாதம் 13-ந் தேதி தீர்ப்பு வெளியிடப்படும் என்று கோவை மகளிர் நீதிமன்றம் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை 10:30 மணிக்கு குற்றம் சுமத்தப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள்தான் என்று உறுதி செய்யப்பட்டது. அதன்படி, 12.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது. 9 பேருக்கும் சாகும்வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
அதன்படி, முதல் குற்றவாளி சபரிராஜனுக்கு 4 ஆயுள் தண்டனைகள் இரண்டாம் குற்றவாளி திருநாவுக்கரசுக்கு 5 ஆயுள் தண்டனைகள் மூன்றாம் குற்றவாளி சதீஷுக்கு 3 ஆயுள் தண்டனைகள் நான்காம் குற்றவாளி வசந்தகுமாருக்கு 2 ஆயுள் தண்டனைகள்
ஐந்தாம் குற்றவாளி மணி எனும் மணிவண்ணனுக்கு 5 ஆயுள் தண்டனைகள்
ஆறாம் குற்றவாளி பாபுவுக்கு ஒரு ஆயுள் தண்டனை ஏழாம் குற்றவாளி ஹெரன்பாலுக்கு 3 ஆயுள் தண்டனைகள் எட்டாம் குற்றவாளி அருளானந்தத்துக்கு ஒரு ஆயுள் தண்டனை
ஒன்பதாம் குற்றவாளி அருண்குமாருக்கு ஒரு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இந்த வழக்கு மேல் முறையீடு செய்யப்படலாம் என்று தெரிகிறது.
முன்னதாக பொள்ளாச்சி பாலியல் வழக்கை கோவை மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி தொடர்ந்து 5 ஆண்டுகளாக விசாரித்து வந்தார். இடையில் அவருக்கு பணியிட மாற்ற உத்தரவு வழங்கப்பட்டது. ஆனால், உயர்நீதிமன்ற உத்தரவால் அது தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில், தொடர்ந்து, இந்த வழக்கை அவர் விசாரித்து வந்தார்.