ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில், கணவர் கண் முன்னே பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூர சம்பவத்தில் ஒருவரை பிடித்து பொதுமக்கள் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். மேலும் 3 பேரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

ராமேஸ்வரத்தை சேர்ந்த கணவன், மனைவி இருவரும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ராமநாதபுரத்திற்கு புது துணிமணிகள் மற்றும் பொருட்களை வாங்க சென்றுள்ளனர். அங்கு புதுத் துணிமணிகளை வாங்கிக் கொண்டு நேற்று மாலை அவர்கள் இருவரும் ராமேஸ்வரத்திற்கு பேருந்து மூலம் வந்தனர். பின்னர் பேருந்து நிலையத்தில் இறங்கி தங்களது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் அவர்கள் இருவரும் சென்று கொண்டிருந்த போது, அந்த பகுதியில் மது அருந்தி கொண்டிருந்த நான்கு இளைஞர்கள் அந்த தம்பதியை தகாத வார்த்தையால் திட்டியுள்ளனர்.

இதனால் கோபம் அடைந்த கணவர், அந்த நான்கு இளைஞர்களிடம் சென்று ஏன் இவ்வாறு பேசுகிறீர்கள்? என தட்டிக் கேட்டுள்ளார். அப்போது மது போதையில் இருந்த அந்த இளைஞர்கள், கணவரை பிடித்து அடித்து உதைத்து மரத்தில் கட்டி வைத்தனர். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கூச்சலிட்டுள்ளார். ஆனால், அந்த பகுதியில் யாரும் இல்லாததால், அந்த பெண்ணுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை. மேலும், அப்போது போதையில் இருந்த அந்த இளைஞர்கள், அந்தப் பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இதனையடுத்து மரத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த கணவர், அந்த பகுதியில் இருந்தவர்களை கூச்சலிட்டு அழைத்துள்ளார். சிறிது நேரத்திற்குப் பிறகு கணவரின் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். இதனை பார்த்த இளைஞர்கள் 4 பேரும் அங்கு இருந்து தப்பியோட முயன்றுள்ளனர். ஆனால், பொதுமக்கள் அவர்களை விரட்டினர். இதில் ஒருவர் பிடிபட்டார். மற்ற மூவரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

பின்னர், பொதுமக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். விரைந்து வந்த காவல் துறையினரிடம் தாங்கள் பிடித்து வைத்திருந்த இளைஞரை பொதுமக்கள் ஒப்படைத்தனர். மேலும் தப்பியோடிய மூவரையும் காவல் துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version