விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியம், அச்சம் தவிர்த்தான் கிராமத்தில் பட்டியலின மக்கள் குடியிருக்கும் பகுதி பறைச்சேரி என அரசு ஆவணங்களில் நீண்ட காலமாக இருந்து வருகிறது. இப்பெயரை வடக்கு அச்சம்தவிர்த்தான் என மாற்றம் செய்ய வலியுறுத்தி பல ஆண்டுகளாக மக்கள் போராடி வருகின்றனர்.

 கடந்த 2015 ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் அரசு அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பியதோடு, மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.

இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் தொடர்ந்து இப் பிரச்சனையில் அதிகாரிகளிடம் பெயர் மாற்றம் செய்ய வலியுறுத்தப்பட்டு வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் பரிந்துரைத்த நிலையில் இன்னும் அரசு ஆவணங்களிலும், வாக்காளர் பட்டியலிலும் பெயர் மாறாமல் பறைச்சேரி என்று இருந்ததால் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலை கிராம மக்கள் புறக்கணிப்பு செய்வதாகக் கூறினர்.

இதையடுத்து, அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி புதிய அரசு அமைந்த உடன் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் அடிப்படையில் தேர்தல் புறக்கணிப்பை மக்கள் கைவிட்டனர்.

 இந்நிலையில் இந்தக் கிராம மக்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர் கே.அர்ஜுனன், மாவட்ட செயலாளர் ஏ.குருசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.மாரியப்பன், எம்.முத்துக்குமார், ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றிய செயலாளர் எஸ்.வி.சசிகுமார், நகரச் செயலாளர் ஜெயக்குமார், மாவட்ட குழு உறுப்பினர் திருமலை, இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் ஆனந்த கண்ணன் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து உரையாடினர்.

தேர்தல் முடிவு வந்து புதிய அரசு அமைந்தபின் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளை சந்தித்து அரசிதழில் மாற்றம் செய்வதற்கான நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மேற்கொள்ளும் என கிராம மக்களிடம் உறுதி அளித்துள்ளனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version