மறைந்த முன்னாள் பிரதமர் வி.பி.சிங் பிறந்தநாளில் முதலமைச்சர் உள்பட பல்வேறு அரசியல் கட்சியினரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்
எளிமை, நேர்மை மற்றும் கொள்கைப் பற்றுடன் அரசியல் வாழ்வை முன்னெடுத்த முன்னாள் பிரதமர் வி.பி. சிங் அவர்களின் பிறந்தநாளில், அவருக்கு எனது சமூக நீதி வணக்கம். சமூக நீதிக்கான அவரது பங்களிப்பும், சமத்துவமான சமூகத்தை உருவாக்குவதற்கான அவரது அர்ப்பணிப்பும் இந்திய அரசியல் வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
திராவிட இயக்கம் தோன்றாத வடக்கே உதித்த சமூகநீதிக் காவலர் வி.பி. சிங் அவர்களின் பிறந்தநாள்!
இந்தியா எத்தனையோ பிரதமர்களைக் கண்டிருக்கிறது. குறுகிய காலமே அப்பதவியில் இருந்தாலும் சமூகநீதியை நிலைநாட்டுவதற்காகப் பிரதமர் பதவியையே துச்சமாகக் கருதி வி.பி.சிங் காட்டிய உறுதி என்றென்றும் நாம் நினைத்துப் போற்றத்தக்கது.
தி.மு.க.வைப் போலவே, ‘ஆட்சியும் பதவிகளும் முக்கியமல்ல; சமூகநீதிக் கொள்கையே முக்கியம்’ என வாழ்ந்து காட்டியவர் திரு. வி.பி. சிங் அவர்கள். தமிழ்நாட்டை விரும்பிய, தமிழர்கள் விரும்பிய பிரதமராகத் திகழ்ந்தார்.
நெருக்கடியான சூழலிலும் தலைவர் கலைஞருக்குத் தோள் கொடுத்த உண்மையான கொள்கைத் தோழமையான அவருக்கு என் வீரவணக்கம்!
உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர்;
இந்தியாவின் சமூகநீதிக் காவலர் – முன்னாள் பிரதமர் வி.பி.சிங் அவர்களின் பிறந்த நாள் இன்று.
பிரதமர் பதவியை விட, பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றமே முக்கியமென்று மண்டல் கமிஷன் பரிந்துரையை நடைமுறைப்படுத்தியவர்.
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் உற்ற நண்பராக தோளோடு தோள் நின்ற பண்பாளர்.
பதவியைவிட கொள்கையே பெரிது என்று வாழ்ந்து மறைந்த வி.பி.சிங் அவர்களின் புகழைப் போற்றுவோம்!
கனிமொழி, திமுக துணைப் பொதுச் செயலாளர்
சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களின் 95-வது பிறந்தநாள் இன்று. கோடிக்கணக்கான பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்வியையும், வேலைவாய்ப்பையும் உறுதி செய்யும் மண்டல் ஆணைக்குழுவின் அறிக்கையைச் சட்டமாக்கி, பல நூற்றாண்டு கால அடக்குமுறைக்கு முடிவுகட்டியவர்.
சமூகநீதியின் ஆதாரப்புள்ளியாக இருக்கும் இடஒதுக்கீட்டை ஒழித்திடத் துடிக்கும் ஆதிக்கசக்திகளுக்கு எதிராக ஒன்றிணைந்து, அவர் வழியில் போராடுவோம். வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தின் முக்கியத்துவத்தை வரும் தலைமுறையினருக்கு உணர்த்துவோம்.
அன்புமணி ராமதாஸ்
பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சீண்டப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருந்த மண்டல் ஆணையத்தின் அறிக்கைக்கு உயிரூட்டி மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கிய சமூகநீதிக் காவலர், முன்னாள் பிரதமர் வி.பி.சிங் அவர்களுக்கு இன்று 96-ஆம் பிறந்தநாள். இந்த நாளில் அவருக்கும், அவரது சமூகநீதி சாதனைகளுக்கு வணக்கம் செலுத்துகிறேன்.
அனைத்து சமூகங்களுக்கும் அவர்களின் மக்கள்தொகைக்கு இணையான இடப்பங்கீடு என்ற இலக்கை அடைவது தான் சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான மரியாதையாக இருக்கும்.
ஆதவ் அர்ஜுனா, அமைச்சர்
இந்தியாவின் மௌனப் புரட்சி’ என்று வர்ணிக்கப்படும் மண்டல் ஆணைய பரிந்துரையை நிறைவேற்றிய வரலாற்றுத் தருணத்திற்குச் சொந்தக்காரர், ‘இந்தியாவின் சமூகநீதி போராளி’ – முன்னாள் பிரதமர் வி.பி. சிங் பிறந்தநாள் இன்று. சமூக விரோத சக்திகளின் அச்சுறுத்தலுக்கு அடிபணியாமல் அனைத்து மக்களுக்குமான சமூகநீதியை நிலைநாட்டியவர். புரட்சியாளர் அம்பேத்கருக்குப் பாரத ரத்னா விருது, நாடாளுமன்றத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் படம் போன்ற சமத்துவ செயல்பாடுகளை முன்னெடுத்தவர். மேலும், கூட்டாட்சித் தத்துவம், மதச்சார்பின்மை ஆகிய கொள்கைகளில் உறுதியாக இருந்த வி.பி. சிங் அவர்களின் புகழைப் போற்றுவோம்.
