திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வின் தனி நீதிபதி அளித்த தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை அமர்வின் தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார். இந்தநிலையில் தீபம் ஏற்றப்படாததால், அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இதனிடையே, தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தமிழ்நாடு அரசு முறையிட்டது.

இந்த மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு,  திருப்பரங்குன்றம் மலை மீது தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்படாததற்கு கண்டனம் தெரிவித்தது. இதனிடையே நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த நிதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மதுரை மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர் காணொலி மூலம் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டுமென்று உத்தரவிட்டார். விசாரணைக்குப் பிறகு, இன்று (டிச. 4) இரவுக்குள் தீபத்தூணில் தீபம் ஏற்றி, அதற்கான அறிக்கையை நாளை (டிச. 5) தாக்கல் செய்ய வேண்டுமென்று மதுரை காவல் ஆணையருக்கு நீதிபதி உத்தரவிட்டார். ஆனால், இரவுக்குள் தீபம் ஏற்ற வேண்டுமென்ற உத்தரவும் நிறைவேற்றப்படவில்லை.

இந்நிலையில், தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது. அதில், நூறு ஆண்டுகளாக தீபம் ஏற்றும் இடத்தை விட்டுவிட்டு, வேறு இடத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என கேட்பது தான் பிரச்னை என குறிப்பிடப்பட்டுள்ளது. மற்றபடி கார்த்திகை தீபம் ஏற்ற எந்த தடையும் அரசு விதிக்கவில்லை என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவால், தமிழகத்தில் சட்டப் பிரச்னை ஏற்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே இந்த வழக்கில் மனுதாரர் ராம ரவிக்குமார் தரப்பிலும் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவுக்கு எதிராக மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டால், தங்கள் தரப்பை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என அந்த மனுவில் ராம ரவிக்குமார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version