தேர்தல் நெருங்கும் சூழலில் பாமக எம்.எல்.ஏ.க்கள் 3 பேரை கட்சியில் இருந்து நீக்கி ராமதாஸ் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் முரளி சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட சட்டமன்ற உறுப்பினர்களிடம் பாட்டாளி மக்கள் கட்சியினுடைய ஒழுங்கு நடவடிக்கை குழுவின் மூலம் விளக்கம் கேட்டு 2007.2025 ல் அனுப்பப்பட்டது.
இக்கடிதத்திற்கு இதுவரை பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் மருத்துவர் அய்யா அவர்களிடம் நேரிலோ, தொலைபேசியிலோ அல்லது கடிதம் மூலமாகவோ எந்தவித பதிலும் அளிக்காமல் தொடர்ந்து கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதால், மயிலம் சட்டமன்ற உறுப்பினர் திரு.ச.சிவக்குமார், மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் திரு எஸ்.சதாசிவம், தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் திரு எஸ்.பி வெங்கடேஸ்வரன் ஆகிய மூவரும் கட்சியின் நற்பெயருக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
எனவே இதுவரை தற்காலிக நீக்கம் செய்யப்பட்டிருந்த அவர்கள் மூவரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் இன்று 12.01.2026 முதல் முழுமையாக நீக்கப்படுகிறார்கள். பாட்டாளி மக்கள் கட்சியினர் யாரும் மேற்கண்ட மூவரிடம் எந்தவித கட்சித் தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
