பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளுக்கு மத்தியில் இன்று தமிழகம் வர இருந்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் தேமுதிக பாமக உள்ளிட்ட கட்சிகளை கொண்டு வருவது குறித்து தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதற்காக கூட்டணி அமைப்பது குறித்து ஆலோசனை நடத்த மத்திய உள்துறை அமைச்சர் இன்று தமிழகம் வருகை தருவார் என்றும் தேமுதிக மற்றும் பாமக, அமமுக கட்சிகளின் தலைவர்களை சந்திப்பார் என தகவல் வெளியாகி இருந்தது.
ஆனால் ஜனவரி மாத நடைபெறும் பொதுக் கூட்டத்தில் தான் எங்களுடைய நிலைப்பாட்டை அறிவிப்போம் என தேமுதிக திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது, அதேபோல பாமகவும் தமிழக வெற்றிக்கழகத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகமும் தமிழக வெற்றி கழகத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி வரும் நிலையில் கூட்டணியை இறுதி செய்ய முடியாமல் பாஜக மற்றும் அதிமுக திணறி வருகிறது.
முன்னதாக தமிழக பாஜக தலைவர் நைனார் நாகேந்திரனை அழைத்து பேசிய அமித்ஷா இந்த மாத இறுதிக்குள்ளாக கூட்டணியை இறுதி செய்ய வேண்டும் அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் பிரதமர் மோடி தமிழகம் வர உள்ளதால் அன்றைய தினம் அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களும் மேடையில் இருக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இந்தநிலையில், பெரும் எதிர்பார்ப்பாக இருந்த அமித்ஷாவின் வருகை தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும், இம்மாத இறுதியில் அவர் தமிழகம் வருவதற்கான வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
