கோவை மாவட்டம் வால்பாறையில், தனியார் எஸ்டேட் பகுதியில் இருசக்கர வாகனம் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் திருச்சியைச் சேர்ந்த 2 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான வால்பாறைக்குத் தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். தற்போது நீதிமன்ற உத்தரவின்படி ஆழியார் சோதனைச் சாவடியில் தினசரி 500 வாகனங்களும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 750 வாகனங்களும் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றன. விபத்துகளைத் தவிர்க்கக் காவல்துறையினர் வளைவுகளில் விழிப்புணர்வுப் பலகைகளை வைத்து, பயணிகளை எச்சரிக்கையுடன் செல்ல அறிவுறுத்தி வருகின்றனர்.

இந்தநிலையில், திருச்சி மாவட்டம் மணச்சநல்லூரைச் சேர்ந்த ரமேஷ் (23, தனியார் நிறுவன ஊழியர்) மற்றும் பூபாலன் (ஐடி நிறுவன ஊழியர்) ஆகிய இரு இளைஞர்களும் இருசக்கர வாகனத்தில் வால்பாறைக்குச் சுற்றுலா சென்றுள்ளனர். இவர்கள் ‘ஐயர்பாடி டிஸ்பென்சரி’ என்ற பகுதிக்குச் சென்றபோது, அங்கிருந்த இயற்கை எழிலைக் பார்த்து, புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க முயன்றதாக தெரிகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக இவர்களது இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, தேயிலைத் தோட்டங்கள் நிறைந்த ஆழமான பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானது.

 

இந்த பயங்கர விபத்தில் படுகாயமடைந்த ரமேஷ் மற்றும் பூபாலன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற வால்பாறை காவல் நிலையப் போலீசார், இருவரது உடல்களையும் மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version