கரூர் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் விஜய்யின் பெயர் இல்லை. எனினும் அவரிடமும் விசாரணை நடத்துவதற்கு அதிகாரிகள் முடிவு செய்தனர். இந்தநிலையில் விசாரணையின் தொடர்ச்சியாக த.வெ.க. தலைவர் விஜயையும் நேரில் அழைத்து விசாரிக்க சி.பி.ஐ. முடிவு செய்து அவருக்கு சம்மன் அனுப்பியது.
அதன்படி, தனி விமானம் மூலம் சென்ற விஜய் நேற்று காலை 11.30 மணியளவில் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். கடந்த டிசம்பர் மாதம் 3 நாட்கள் தவெக நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார் ஆகியோர் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்து இருந்தனர். இதன் தொடர்ச்சியாக தற்போது விஜயிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.
இருப்பினும், சிபிஐ அதிகாரிகளிடம் விஜய் கூறிய பல்வேறு முக்கியமான தகவல்கள் கசிந்துள்ளன. 4 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகளிடம் 100க்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த விஜய், தமிழக அரசுக்கு எதிராக பல்வேறு தகவல்களையும் கூறியதாக தெரிகிறது, குறிப்பாக காவல்துறையின் அழுத்தத்தின் பேரிலேயே கரூரிலிருந்து தான் சென்னை கிளம்பியதாகவும் கூட்ட நெரிசலுக்கு அரசுதான் முழு காரணம் என அழுத்தமாக விஜய் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தநிலையில் டெல்லியில் சிபிஐ விசாரணையை முடித்துவிட்டு சென்னைக்கு புறப்பட்டுள்ளார் விஜய். புஸ்ஸி ஆனந்த், நிர்மல், ஆதவ்விடம் 3 நாட்கள் சிபிஐ விசாரணை நடைபெற்ற நிலையில், விஜய் கேட்டுக்கொண்டதால், ஒரு நாளோடு விசாரணை முடிந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில், ஜனவரி 19ம் தேதி ஆஜராகும்படி விஜய்க்கு மீண்டும் சம்மன் அனுப்பவுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. இதனால் சென்னைக்கு வந்ததும் வழக்கறிஞர்கள் குழுவுடன் விஜய் உடனடி ஆலோசனையில் ஈடுபடவுள்ளதாக கூறப்படுகிறது.
