சாதி, மதம், முதலாளி, தொழிலாளி உள்ளிட்ட அனைவரையும் தாண்டி நம்மை இணைத்திருப்பது தமிழ்தான் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறையின் சார்பில் தமிழால் இணைவோம், தரணியில் உயர்வோம் என்ற தலைப்பின் கீழ் அயலக தமிழர் தின விழா கொண்டாடப்பட்டது, விழாவில் துணை முதலமைச்சர், அமைச்சர்கள் துரைமுருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின்,அயலக தமிழர் தினத்தை திராவிட மாடல் அரசு கடந்த 5 ஆண்டுகளாக சிறப்பாக கொண்டாடி வருகிறது. தமிழ் மொழி என்பது நம் அனைவரையும் இணைக்கக்கூடிய மொழி. தமிழ் யாரையும் வேறுபடுத்தாது, பிரித்துப் பார்க்காது. யாருக்கும் எந்த பேதத்தையும் காட்டாத மொழிதான் நம்முடைய தாய் மொழி, தமிழ் மொழி. தமிழ் அடையாளத்திற்கு முன்னாடி வேறு எந்த அடையாளமும் நிற்க முடியாது, போட்டி போடவும் முடியாது.
சாதி, மதம், ஏழை, முதலாளி உள்ளிட்ட அனைத்தையும் தாண்டி நம்மை இணைத்திருப்பது தமிழ்தான். அப்படி நாம் அனைவரும் தமிழால் இணைந்ததால்தான் தரணியை வென்றுகொண்டிருக்கிறோம். ஒன்றாக இணையாத எந்த இனமும் வெற்றி பெற்றதாக வரலாறு இல்லை. அந்தவகையில் உலகெங்கும் வாழக்கூடிய தமிழர்களை ஒருங்கிணைப்பது மிகமிக முக்கியமானது. இந்த நேரத்தில் மிக மிக அவசியமானது. அதைவிட முக்கியம் அவர்களின் நலன்களை பாதுகாப்பது ஆகும் என்று கூறினார்.
