பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் வரும் 2 ஆம் தேதி தவெகவுடைய 3 ஆம் ஆண்டு துவக்க விழா அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் கடந்த 2024ம் ஆண்டு பிப். 2 ஆம் தேதி கட்சிக்கான பெயரையும் கட்சிக் கொடியையும் வெளியிட்டார். தொடர்ந்து கடந்த 2024ம் ஆண்டு அக்டோபர் மாதம் கட்சியின் மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்தினார். இது தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதையடுத்து, 2ம் ஆண்டு துவக்க விழாவில் மற்ற அரசியல் கட்சிகளை விஜய் நேரடியாகவே தாக்கி பேசியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அப்போது, “அரசியலில் யார் எப்போது யாரை எதிர்ப்பார்கள், ஆதரிப்பார்கள் என்று தெரியாது. அரசியலில் நிரந்தர நண்பனும் நிரந்தர எதிரியும் கிடையாது என்று கூறுவார்கள். மக்களுக்கு அதிகமாகப் பிடித்த ஒருவர் அரசியலுக்கு வந்தால் நல்லவர்கள் அதை வரவேற்பார்கள், ஆனால் ஒரு சிலருக்கு எரிச்சல் ஏற்படும்.
கட்சியின் நிர்வாகிகள் அனைவரும் இளைஞர்களாக இருப்பது குறித்து விமர்சிக்கப்படுவதாகக் கூறிய விஜய், அண்ணா, எம்.ஜி.ஆர் ஆகியோர் கட்சி தொடங்கியபோது அவர்களின் பின்னால் இருந்தவர்கள் இளைஞர்கள்தானே! அவர்களால்தான் 1967, 1977 தேர்தல்களில் வெற்றி கிடைத்தது,” என்று பேசினார்.
“அந்தக் காலத்தில், பண்ணையார்கள் கட்சியில் இருப்பார்கள். ஆனால் இப்போது கட்சியில் இருப்பவர்கள் பண்ணையாளர்களாக மாறிவிடுகிறார்கள். மக்கள் நலன், வளர்ச்சி ஆகியவை குறித்துக் கவலைப்படாமல், எந்தெந்த வழிகளில் எல்லாம் பணம் பெறலாம் என்று நினைக்கிறார்கள். இப்படிப்பட்ட பண்ணையார்களை அரசியலை விட்டே அகற்றுவதுதான் நமது நோக்கம்,” என்று விமர்சித்தார்.
மும்மொழிக் கொள்கை குறித்தும் கருத்து தெரிவித்த விஜய், மும்மொழிக் கொள்கையைச் செயல்படுத்தாவிட்டால் மாநில அரசுக்கு கல்விக்கான நிதியை கொடுக்க மட்டார்கள் என்பது எல்கேஜி, யுகேஜி சிறுவர்கள் சண்டை போட்டுக் கொள்வது போல உள்ளது” எனக் கூறிய அவர், கொடுக்க வேண்டியது அவர்களது கடமை, வாங்க வேண்டியது இவர்களது உரிமை என்றார்.
மேலும், “இரண்டு பேரும் – அதாவது பாசிசமும் பாயாசமும் – அதாவது நமது அரசியல் எதிரியும் கொள்கை எதிரியும் பேசி வைத்துக் கொண்டு சமூக ஊடகத்தில் ஹேஷ்டேக் போட்டு விளையாடிக் கொண்டிருக்கின்றனர். இருவரும் அடித்துக் கொள்வது மாதிரி நடிப்பார்களாம், அதை மக்கள் நம்ப வேண்டுமாம்,” என்று பாஜக, திமுக இருதரப்புமே மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் அரசியல் செய்வதாக விமர்சித்தார் விஜய். இவரது பேச்சு, திமுக – அதிமுக தலைவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது
இந்தநிலையில், தற்போது 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிட உள்ள நிலையில், கரூர் கூட்ட நெரிசல் சம்பவம், ஜன நாயகன் பட சென்சார் விவகாரம் உள்ளிட்டவைகளால் தற்போது விஜய் அமைதியாக உள்ளார். ஏற்கனவே, மற்ற அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி ஒதுக்கீடு உள்ளிட்ட பணிகளில் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டன.
ஆனால், தவெக தனித்தே போட்டியிட வேண்டும் என்ற முடிவில் இருப்பதாக தெரிகிறது. இந்தநிலையில், வரும் 2 ஆம் தேதி தவெகவுடைய 3 ஆம் ஆண்டு துவக்க விழா விஜய் தலைமையில் நடைபெறவுள்ளது. அப்போது முக்கிய முடிவுகளை விஜய் எடுப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர் தேர்வை இறுதி செய்யும் பணிகளை தீவிரபடுத்தியுள்ள தவெக, பிப்.2ம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியலை வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.
