எத்தியோப்பியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.15 கோடி மதிப்பிலான போதைப்பொருள்கள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து சென்னை வரும் விமானத்தில் போதைப்பொருட்கள் கடத்தி கொண்டு வரப்படுவதாக மத்திய குற்றப்பிரிவு தடுப்பு புலனாய்வு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதுதொடர்பாக அவர்கள் விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்க, இன்று வெளிநாடுகளில் இருந்து சென்னை வந்த பயணிகளிடம் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.
இதில், எத்தியோப்பியா நாட்டிலிருந்து சென்னை வந்த 25 வயது மதிக்கத்தக்க பெண்ணிடம் சோதனை நடத்தியதில், அவரிடம் போதைப்பொருள் இருப்பது கண்டறியப்பட்டது. அவரது உடமைகளைச் சோதித்தபோது எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் அவரை மருத்துவ சோதனைக்கு உட்படுத்தியபோது அதிர்ச்சித் தகவல் வெளியானது.
அவர் போதைப்பொருளைச் சிறிய கேப்சூல்களாக மாற்றி, அப்படியே தனது வயிற்றுக்குள் விழுங்கி கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அந்தப் பெண்ணின் வயிற்றிலிருந்த கேப்சூல்கள் மருத்துவ உதவியுடன் பாதுகாப்பாக வெளியே எடுக்கப்பட்டன. அப்பெண்ணின் வயிற்றில் இருந்து எடுக்கப்பட்ட போதைப்பொருட்களின் அளவு 850 கிராம் என அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் அது கொக்கைன் வகையைச் சேர்ந்த போதைப்பொருள் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனுடைய சர்வதேச சந்தை மதிப்பு சுமார் ரூ.15 கோடி என்றும் கணிக்கப்பட்டது.
கைது செய்யப்பட்டவர் கென்யா நாட்டைச் சேர்ந்தவர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ள அதிகாரிகள், கடத்தி வரப்பட்ட போதைப்பொருள் எங்கு விநியோகிக்கப்பட இருந்தது, இதன் பிண்ணனியில் உள்ளவர்கள் யார்? என்பன குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
