தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களுக்கு இன்று (மே 16) கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தெற்கு வங்கக் கடலின் சில பகுதிகள், அந்தமான் கடல், அந்தமான் மற்றும் நிகோபார் தீவு பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை தொடங்கக் கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும், தென்மேற்கு வங்கக் கடல், மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அதே பகுதிகளில் தொடர்ந்து நிலவுவதால், தென் தமிழகம் மற்றும் கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.
விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை மற்றும் தேனி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று (மே 16) இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என்பதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. திண்டுக்கல், தேனி, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை (மே 17) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

