ஈரானில் இருந்து இந்தியா நோக்கி கச்சா எண்ணெய் ஏற்றி வந்த கப்பல் திடீரென தனது பயணப் பாதையை மாற்றி சீனாவுக்குச் சென்று கொண்டிருப்பது சர்வதேச எரிசக்தி சந்தையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானில் இருந்து கச்சா எண்ணெயுடன் குஜராத்தின் வாடினார் (Vadinar) துறைமுகத்திற்கு வந்து கொண்டிருந்த ‘பிங் ஷுன்’ (Ping Shun) என்ற கப்பல், இந்தியாவை நெருங்கிய நிலையில் திடீரென தனது திசையை மாற்றியுள்ளது. தற்போது இந்தக் கப்பல் சீனா நோக்கிச் செல்வதற்கான சமிக்ஞைகளை (Signals) அனுப்பி வருவதாக கப்பல் போக்குவரத்து தரவு நிறுவனமான Kpler தெரிவித்துள்ளது.
இந்தக் கப்பல் இந்தியா வந்திருந்தால், கடந்த ஏழு ஆண்டுகளில் ஈரான் கச்சா எண்ணெயை இந்தியா வாங்குவது இதுவே முதல் முறையாக இருந்திருக்கும். 2019-இல் அமெரிக்கத் தடைகள் காரணமாக இந்தியா ஈரான் எண்ணெயை இறக்குமதி செய்வதை நிறுத்தியது.
2002-இல் கட்டப்பட்ட இந்த ‘பிங் ஷுன்’ கப்பல், 2025-ஆம் ஆண்டு அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளுக்கு உள்ளான ஒரு கப்பலாகும். கப்பல் திசைமாறியதற்கு முக்கியக் காரணம் பணம் செலுத்துவதில் (Payment Issues) ஏற்பட்டுள்ள சிக்கல்கள் எனக் கூறப்படுகிறது. விற்பனையாளர்கள் முன்கூட்டியே அல்லது மிகக் குறுகிய காலத்தில் பணம் செலுத்தக் கோருவதாகவும், சர்வதேச வங்கிப் பரிமாற்ற அமைப்பான SWIFT-இல் ஈரான் இல்லாததால் பணத்தை அனுப்புவதில் சிக்கல் நீடிப்பதாகவும் ஆய்வாளர் சுமித் ரிடோலியா தெரிவித்துள்ளார்.
கடந்த மூன்று நாட்களாக இந்தியா நோக்கிய பாதையில் இருந்த இந்தக் கப்பல், தற்போது சீனாவின் டோங்கிங் (Dongying) துறைமுகம் நோக்கித் திரும்பியுள்ளது. அமெரிக்கா சமீபத்தில் ஈரான் எண்ணெய் மீதான தடைகளில் 30 நாட்கள் தளர்வு அளித்திருந்த போதிலும், வங்கி நடைமுறைகளில் உள்ள சிக்கல்கள் காரணமாக இந்திய நிறுவனங்களால் இந்த வர்த்தகத்தை முழுமையாக முடிக்க முடியவில்லை என்று தெரிகிறது.
