ஐபிஎல் திருவிழாவின் மிக முக்கியமான ஆட்டமான மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான மோதல் நாளை மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த ஆட்டத்தில் சிஎஸ்கே ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பாக இருப்பவர் ‘தல’ எம்.எஸ். தோனி. சமீபத்தில் காயத்தால் அவதிப்பட்டு வந்த அவர், தற்போது அதிலிருந்து முழுமையாக மீண்டு தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். வலைப்பயிற்சியின் போது தோனி தனது பழைய பாணியில் சிக்ஸர்களை மைதானத்தின் நாலாபுறமும் பறக்கவிடும் வீடியோவை ஐபிஎல் நிர்வாகம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, “சிங்கம் தனது வேட்டைக்குத் தயாராகிவிட்டது” என்று சிஎஸ்கே ரசிகர்கள் சமூக வலைதளங்களை அதிரவைத்து வருகின்றனர். குறிப்பாக தோனியின் டிரேட்மார்க் ஷாட்டான ‘ஹெலிகாப்டர் ஷாட்’ நாளை வான்கடே மைதானத்தில் மீண்டும் அரங்கேறுமா என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். வான்கடே மைதானம் தோனிக்கு மிகவும் ராசியான மைதானம் என்பதால், நாளை மும்பைக்கு எதிராக அவர் அதிரடி காட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு தோனியின் அதிரடியைக் காணக் காத்திருக்கும் ரசிகர்களுக்கு இந்தப் பயிற்சி வீடியோ பெரும் உற்சாகத்தைத் தந்துள்ளது.
