நீலாங்கரை வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார் விஜய். 2021-ம் ஆண்டு தேர்தலில் சைக்கிளில் சென்று வாக்களித்த அவர், இம்முறை காரில் சென்று வாக்களித்துள்ளார். பின்னர், அவர் வெளியே வந்தபோது பொதுமக்கள் பலரும் அவரை சூழ்ந்ததால் லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர், போலீசார் அவரை பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். அரசியல் களத்திற்குள் நுழைந்து தவெக தலைவராக முதல்முறையாக அவர் வாக்களித்திருக்கிறார்.

இதேபோல், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எடப்பாடி தொகுதியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

இதேபோல், மகள் சௌந்தர்யாவுடன் உடன் வந்து நடிகர் ரஜினிகாந்த் ஜனநாயக கடமையாற்றினார். ஆயிரம் விளக்கு தொகுதியில் உள்ள ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியின் வாக்குச்சாவடியில் அவர்கள் இருவரும் வாக்களித்துள்ளனர். அவரை, ‘தலைவா ஐ லவ் யூ’ என கோஷமிட்டு ரசிகர்கள் வரவேற்றனர். வாக்களித்த பிறகு பேசிய அவர், வாக்களிப்பது நமது கடமை, மக்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

சென்னை தேனாம்பேட்டை வாக்குச்சாவடியில் கமல் தனது வாக்கை செலுத்தினார். மகள் ஷ்ருதிஹாசனுடன் காரில் சென்ற அவர், காத்திருந்து தேர்தல் திருவிழாவை நிறைவு செய்தார். அதேபோல், சாலிகிராமம் வாக்குச்சாவடியில் பிரேமலதா ஓட்டு போட்டார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இளைஞர்கள்தான் தமிழ்நாட்டின் எதிர்காலம் என்றார். இளைஞர்கள் நிச்சயமாக வாக்களிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
