மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் நிகழ்ந்த கோரமான படகு விபத்தில், திருச்சியைச் சேர்ந்த மத்திய அரசு ஊழியர் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி நவல்பட்டு அண்ணா நகரைச் சேர்ந்த காமராஜ் (38), அங்குள்ள துப்பாக்கி தொழிற்சாலையில் கடந்த ஓராண்டாகப் பணியாற்றி வந்தார். கோடை விடுமுறையைக் கொண்டாடுவதற்காக திருப்பூரிலிருந்து அவரது அண்ணன் குடும்பத்தினர் ஜபல்பூர் சென்றிருந்த நிலையில், அனைவரும் அங்குள்ள பர்கி அணைப் பகுதியில் படகு சவாரி செய்தபோது இந்த விபத்து நேரிட்டுள்ளது.
அணைப் பகுதியில் படகு சவாரி செய்தபோது, எதிர்பாராத விதமாக படகு கவிழ்ந்ததில் காமராஜ், அவரது மனைவி கார்குழலி, 5 வயது மகன் தமிழ் வேந்தன், காமராஜின் அண்ணி மற்றும் அவரது ஒரு குழந்தை என மொத்தம் 5 பேர் தண்ணீரில் மூழ்கினர். அதிர்ஷ்டவசமாக, லைஃப் ஜாக்கெட் அணிந்திருந்த காமராஜின் மூத்த மகன் புவிதரன் மற்றும் மற்றொரு குழந்தை ஆகிய இருவரும் உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்த தகவல் அறிந்ததும் உள்ளூர் மீட்புப் படையினர் விரைந்து வந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
தற்போதைய நிலவரப்படி, கார்குழலி மற்றும் அவரது அண்ணியின் உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளன. நீரில் மூழ்கிய காமராஜ் மற்றும் இரண்டு குழந்தைகளின் உடல்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. உயிரிழந்தவர்களின் உடல்களை விமானம் மூலம் திருச்சிக்குக் கொண்டு வரத் துப்பாக்கி தொழிற்சாலை நிர்வாகமும், உறவினர்களும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். சுற்றுலா சென்ற இடத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியான சம்பவம் திருச்சியில் உள்ள அவர்களது உறவினர்களிடையே ஆறாத் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
