திருப்பத்தூர் அருகே உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், மருத்துவர் இல்லாத காரணத்தால் தூய்மைப் பணியாளர் ஒருவர் நோயாளிக்குச் சிகிச்சை அளித்த அவலம் அரங்கேறியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் குனிச்சி பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு குனிச்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் நாள்தோறும் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர், நேற்று தனது விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது நெற்றியில் காயம் ஏற்பட்டு, ரத்தம் கசிந்துள்ளது.
காயத்திற்கு மருந்திட்டு சிகிச்சை பெற்றுக் கொள்வதற்காக அந்த முதியவர் குனிச்சி ஆரம்ப சுகாதார நிலையத்திற்குச் சென்றுள்ளார். ஆனால், அந்த நேரத்தில் அங்கு பணியில் இருக்க வேண்டிய மருத்துவர்களோ அல்லது செவிலியர்களோ இல்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்த முதியவருக்கு, அங்கிருந்த தூய்மைப் பணியாளர் ஒருவர் முதலுதவி சிகிச்சை அளித்துள்ளார். முதியவரின் நெற்றியில் இருந்த காயத்தை துடைத்து, அவரே மருந்திட்டு கட்டுப் போட்டுள்ளார்.
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர் ஒருவர் நோயாளிக்குச் சிகிச்சை அளிக்கும் இந்த அதிர்ச்சி காட்சியை அங்கிருந்தவர்கள் தங்களது செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிக வேகமாகப் பரவி, பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களின் தரம் குறித்த கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
