கூட்டுறவு வங்கிகளின் மூலம் ரூ.75,000வரை பயிர்க்கடன் பெற்ற குறு,சிறு மற்றும் இதர பெரு விவசாயிகளுக்கு 100% முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கடந்த 25.05.26 அன்று ரூ.50,000 வரை பயிர்கடன் பெற்ற சிறு, குறு விவசாயிகளுக்கு முழுமையாக பயிர்க்கடன் தள்ளுப்படி செய்யும் திட்டத்தை முதலமைச்சர் விஜய் அறிவித்திருந்தார். மாநிலம் முழுவதிலுமிருந்து இந்த விவசாயக் கடன் தள்ளுபடி குறித்து பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டது. அதன்படி முதலமைச்சரின் உத்தரவுக்கு இணங்க, 15.06.2026 அன்று தலைமைச் செயலகத்தில் இது குறித்து ஆலோசனை மேற்கொள்ள மறு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்திய ரிசர்வ் வங்கியின் 28.11.25ம் தேதியிட்ட அரசு கடன் தள்ளுபடி திட்டங்களுக்கான மாதிரி செயல்பாட்டு நடைமுறைகளின் படி, பயிர்க்கடன் தள்ளுபடிக்கான முழுத்தொகையையும் அரசானது 45 முதல் 60 நாட்களுக்குள் முழுமையாக செலுத்த வேண்டும் என்ற வழிகாட்டுதலின் படியும், தமிழ்நாடு அரசின் இன்றைய நிதிநிலை மற்றும் நிதி ஆதாரங்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும், இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் கூட்டுறவு வங்கிகளில், 1.05.25 முதல் 28.02.26 வரை பயிரக்கடன் பெற்ற 14.43 லட்சம் விவசாயிகளுக்கு சுமார் ரூ.6,000கோடி வரை தள்ளுபடி செய்ய முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
கடன் தொகை ரூபாயில் ரூ.75,000 வரை பெற்றிருந்தால் முழுமையாகவும், ரூ.75,000க்கு மேல் இருந்தால் ரூ.35,000 வரை தள்ளுபடி செய்யப்படும். இதன்மூலம் கடந்த நிதியாண்டில் பயிர்க்கடன் பெற்ற அனைத்து விவசாயிகளுக்கும் அதிகபட்சமாக ரூ.75,000ம், குறைந்தபட்சமாக ரூ.35,000ம் பணப்பயன் கிடைக்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
