கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு அரசு வேலை வழங்குவதற்கான ஆணை பிறப்பித்துள்ளதை நயினார் நாகேந்திரன் வரவேற்றுள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நெல்லையில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலைக்கான ஆணை வழங்கப்பட உள்ளது வரவேற்கத்தக்கது. கரூர் சம்பவம் நடந்த அன்றே விஜய் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறி இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். கரூர் விவகாரத்தில் அரசு வேலை வழங்குவது என்பது அரசியல் ரீதியானது தான்.
இந்தியா கூட்டணி என்பது தற்போது இல்லை . மீனவர் பிரச்சனை தொடங்கி பல்வேறு பிரச்சனைகளில் காங்கிரஸ் கட்சி நாட்டுக்கு துரோகம் செய்த கட்சியாகத் தான் இன்றும் இருந்து வருகிறது.
காங்கிரஸ் ஆட்சி நடக்கும் கர்நாடகாவின் முதல்வரை நேரில் சந்தித்தோ, அல்லது கடிதம் எழுதினாலோ மேகதாது அணை கட்டுவதை முதலமைச்சர் சிவக்குமார் தடுத்து நிறுத்தி இருப்பார். ஆனால் காங்கிரஸ் தமிழக தலைவர் அதனை எதுவும் செய்யாமல் மத்திய அரசை விமர்சனம் செய்து வருகிறார்.
தமிழக முதலமைச்சர் விஜயின் அமைச்சரவையில் உள்ள காங்கிரஸ் அமைச்சர் ஒருவருக்கு போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து கைது செய்யப்படும் நிலை உள்ளது.
தமிழக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளோம் ஆனாலும் திமுகவுடன் நட்பில் உள்ளோம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சொல்வது அங்கொடு கால் இங்கு ஒரு கால் வைத்தது போல் உள்ளது. பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் என்பதைப்போல் திருமாவளவன் கருத்துள்ளது.
அமைச்சர் கீர்த்தனா பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்ட போது குழந்தைகளை அடிமைகளை நடத்துவது போல் நடத்தி ஆய்வை மேற்கொண்டுள்ளார். பள்ளி உள்ளிட்ட இடங்களில் ரீல்ஸ் எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகிறது அது நல்ல செயல்தான்.
தமிழக வெற்றி கழகத்தின் 59 நாள் ஆட்சியில் 109 கற்பழிப்பு சம்பவங்கள் நடந்துள்ளது. ஒரு நாளைக்கு மூன்று கற்பழிப்பு, இரண்டு நாளைக்கு மூன்று படுகொலை நடந்து வருகிறது. தமிழக வெற்றி கழக ஆட்சியை நான் குறை சொல்லவில்லை. ஆனால் ஏன் அதனை எல்லாம் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்பதுதான் கேள்வி.
அமைச்சர், முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் யாரிடமும் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு எந்த தகவலையும் தெரிவிக்க மாட்டேன் என உறுதிமொழி எடுத்து தான் ஆட்சி பொறுப்பை ஏற்கின்றனர். ஆனால் விஜயின் நண்பர்களான ஆரோக்கியசாமி போன்றோர் அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொள்வது அரசியல் அமைப்பு விதிகளுக்கு எதிரானது.
தற்போது நடப்பதை போன்ற மோசமான அரசியல் இதுவரை தமிழகத்தில் நடந்ததில்லை. அமைச்சர் புஸ்சி ஆனந்த் குதிரை பேரத்தில் பிஸியாக உள்ளார். நீர்வளத் துறையை அவர் கவனிக்கவில்லை. காவிரி தண்ணீரை தமிழகத்திற்கு கொண்டு வருவது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கவலைப்படாமல் குதிரைபேரத்தில் பிஸியாக இருந்து வருகிறார். எம்எல்ஏக்களின் குதிரை பேரம் நடந்து வருகிறது.
இடைத்தேர்தல் அறிவிப்பு தமிழகத்திற்கு இல்லாதது, தேர்தல் ஆணையத்தின் முடிவாக இருக்கும் என தெரிவித்தார்.
