காமராஜர் காலை உணவுத் திட்டப் பணிகள் தற்போது புதிதாக தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல் தவறானது என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பாக நகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள விளக்கத்தில், பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம் கடந்த 2022-ஆம் ஆண்டு நகர்ப்புறப் பகுதிகளில் தொடங்கப்பட்ட நாளிலிருந்தே, ஒப்பந்தப்புள்ளி மூலம் தேர்வு செய்யப்பட்ட சேவை வழங்குநர்கள் (Service Providers) மூலமாகவே உணவு தயாரிக்கப்பட்டு பள்ளிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதும் அதே நடைமுறையே தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருவதாகவும், புதிதாக எந்த தனியார் நிறுவனத்திற்கும் ஒப்பந்தம் வழங்கப்படவில்லை என்றும் நகராட்சி நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது.
இதனால், காமராஜர் காலை உணவுத் திட்டம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என்றும், பொதுமக்கள் உறுதி செய்யப்படாத தகவல்களை நம்பவோ, பகிரவோ வேண்டாம் என்றும் அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும், தவறான தகவல்களை பரப்புவது பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதால், அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே நம்ப வேண்டும் எனவும் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. Fact Check, TN Fact Check மற்றும் TNFCU ஆகிய அதிகாரப்பூர்வ தளங்கள் மூலம் வெளியிடப்படும் தகவல்களை மட்டுமே பொதுமக்கள் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
