இயக்குநர் லோகேஷ் கனகராஜ், விரைவில் அஜித்தை வைத்து ஒரு படத்தை இயக்க இருப்பதாக தெரிவித்துளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ், மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என தொடர்ந்து பிளாக் பஸ்டர் படங்களை கொடுத்து வருகிறார் லோகேஷ். அந்த வரிசையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வைத்து கூலி படத்தை இயக்கி முடித்திருக்கிறார்.
அனிரூத் இசையில் உருவாகியுள்ள இப்படத்தில் ரஜினிகாந்துடன், அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், சுருதிஹாசன், பகத் ஃபாசில் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகவுள்ளது.
சமீபத்தில் இப்படத்தின் சிக்கிடு, மோனிகா, பவர் ஹவுஸ் போன்ற பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றது. ஆகஸ்ட் 2-ம் தேதி இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த லோகேஷ் கனகராஜ்,
“அஜித் சார் நடிப்பில் கண்டிப்பாக திரைப்படம் இயக்குவேன். இது 100 சதவீதம் உறுதி. அவரது ஆக்சன் முகத்தை என்னுடைய படத்தில் பயன்படுத்த வேண்டும் என்ற ஆசை உள்ளது. சுரேஷ் சந்திரா மூலமாக சில மாதங்களுக்கு முன் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. அவர் கார் ரேஸிலும் நான் என் அடுத்தடுத்த படங்களிலும் பிசியாக இருப்பதால் கொஞ்சம் தள்ளிப்போகிறது. ஆனால், நிச்சயமாக நடக்கும். எனக்கும் அவருக்கும் ஒரு டைம்லைன் வரும் பொழுது கண்டிப்பாக படத்தை இயக்குவேன். அவரை இயக்குவது என் ஆசைகளில் ஒன்று” என கூறியுள்ளார்.