அரசியல் தலைவர்கள் மற்றும் திரை நட்சத்திரங்கள் மீது ரசிகர்கள் தங்களின் பாசத்தை வெளிப்படுத்தப் பல வழிகளைக் கையாள்வது வழக்கம். ஆனால், புதுச்சேரியில் தவெக நிர்வாகி ஒருவரின் திருமணத்தில், தமிழக முதலமைச்சர் விஜயின் புகைப்படத்தை மேடையில் வைத்து தாலி கட்டிய சுவாரசியமான நிகழ்வு இப்போது இணையத்தில் பரவி வருகிறது.
புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் தொகுதியைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகியான பிரபு என்பவரது குடும்பத் திருமணம் வில்லியனூரில் நடைபெற்றது. மணமகன் அருண்குமார் – மணமகள் சௌமியா ஆகியோரின் இந்த திருமண விழாவில் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் எனப் பலரும் திரளாகக் கலந்துகொண்டனர்.
இதில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது திருமண மேடைதான். மணமக்கள் அமரும் மணமேடையின் அருகிலேயே, தமிழக முதலமைச்சரும் தவெக தலைவருமான விஜயின் பிரம்மாண்டமான உருவப்படம் வைக்கப்பட்டிருந்தது. அந்தப் புகைப்படத்தின் முன்னிலையிலேயே அனைத்து திருமணச் சடங்குகளும் நடைபெற்று, மணமகன் அருண்குமார் மணமகள் சௌமியாவின் கழுத்தில் தாலி கட்டினார்.
விஜய் மீது தாங்கள் வைத்துள்ள அளவற்ற அன்பு, பாசம் மற்றும் அரசியல் பற்றை உலகுக்குக் காட்டும் விதமாகவே அவரது குடும்பத்தினர் இந்த புதுமையான ஏற்பாட்டைச் செய்துள்ளனர். திருமணத்திற்கு வந்தவர்கள் இந்த நெகிழ்ச்சியான காட்சியைத் தங்களது மொபைல் போன்களில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பகிர, தற்போது அந்த வீடியோவும் புகைப்படங்களும் செம வைரலாகி வருகின்றன. விஜய் ரசிகர்கள் மற்றும் தவெக தொண்டர்கள் பலரும் மணமக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவிப்பதோடு, இந்த வீடியோவை ஆவலோடு பகிர்ந்து வருகிறார்கள்.
