கைது செய்யப்பட்டுள்ள விளாத்திக்குளம் திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயனை சந்திக்க விடாமல் காவல்துறையினர் அராஜகத்தில் ஈடுபடுவதாகவும், தவெக ஆட்சி இன்னும் நான்கு மாதத்தில் முடிவுக்கு வந்துவிடும் எனவும் திமுக முன்னாள் அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் விமர்சித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், தமிழக முதல்வர் குறித்து அவதூறு பரப்பும் வகையிலும் மிரட்டல் விடுக்கும் வகையிலும் பேசியதாக தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் இன்று காலை கைது செய்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து சுமார் 5:30 மணி நேரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனை பார்ப்பதற்காக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வந்த முன்னாள் அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அப்துல் வகாப், கருணாநிதி உள்ளிட்டோரை மாவட்ட காவல்துறையினர் சந்திக்க விடாமல் தடுப்பு வேலி அமைத்து தடுத்து நிறுத்தினர்.
இதன் காரணமாக காவல்துறையினர் மற்றும் திமுகவினர் இடையே கடும் வாக்குவாதம் நிலவியதோடு, தள்ளுமுள்ளுவும் ஏற்பட்டது. மேலும் காவல்துறையினர் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக பகுதியில் இருந்து திமுகவினரை அப்புறப்படுத்தும் பணிகள் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து முன்னாள் அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் கீதா ஜீவன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது, எம்எல்ஏவை பார்க்கவிடாமல் காவல்துறையினர் அராஜகத்தில் ஈடுபட்டு வருவதாகவும், அவர் என்ன நிலையில் இருக்கிறார் என்று தெரியவில்லை எனவும் கூறிய கீதா ஜீவன் அவருக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது. அவருக்கு உடல் நிலையில் பல்வேறு பிரச்சனைகள் உள்ளது என்றார். போலீஸ் அராஜகத்தில் ஈடுபடுவதாகவும் ஜனநாயகத்தை காலில் போட்டு மிதிப்பதாகவும் கூறிய கீதா ஜீவன், தவெக எம்.எல்.ஏ மீதான பாலியல் குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி உங்களுக்கு வந்தால் ரத்தம், எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா எனக் கேள்வி எழுப்பினார்.
நேற்று மாதா கோவில் பொருட்காட்சியில் தமிழக வெற்றிக் கழகத்தினர் அராஜகத்தில் ஈடுபட்டார்கள். அவர்கள் மீது எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. பழனி கோயில் நிலத்தை பட்டா போட்டவர்கள் மீதும் இதுவரை முறையாக நடவடிக்கை எடுக்கவில்லை. எந்த அளவிற்கு இவர்கள் அடக்கு முறையை கையாளுகிறார்கள் என்பதை மக்கள் புரிந்து கொள்வார்கள் எனக் கூறினார்.
முன்னாள் அமைச்சரும் திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன் கூறுகையில் சட்டமன்ற உறுப்பினர் மனதில் பட்டதை பேசினார். சட்டமன்றத்தில் சரியான பதிலடி நடக்கும் என்றார். இதில் என்ன தவறு இருக்கிறது. ரூரல் டிஎஸ்பி சுதீரும் மற்றொருவரும்தான் என்னை எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு தமிழக வெற்றி கழகத்தில் இணையச் சொல்லி மிரட்டினார்கள் எனத் தெரிவித்தார்.
மார்க்கண்டேயன் மனைவி எங்களிடம் தகவல் அளித்தார் எனது கணவரை கூட்டி சென்று இருக்கிறார்கள் அவர் உடல்நிலை சரியில்லை முதுவலியில் உள்ளது என்று கூறியிருக்கிறார் நாங்கள் பார்க்க வேண்டும் என்று கூறினால் எங்களை விட மறுத்து ஒரு டிஎஸ்பி எங்களது இடுப்பில் கை வைத்து தள்ளுகிறார்.
இந்த ஆட்சி நான்கு மாதம்தான். இவர்கள் ஆட்டம் நான்கு மாதத்தில் முடிந்துவிடும். பாராளுமன்றம் இப்பொழுது கூடியுள்ளது. அதனால் நாளை இதற்கு முடிவு தெரிந்து விடும். நாங்கள் அவர்களின் சொட்டையை முறித்து விடுவோம் என ஆவேசமாகக் கூறினார் அனிதா ராதாகிருஷ்ணன்.
