டெல்லியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டையைத் தகர்ப்பதாக மும்பை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம அழைப்பு ஒன்று வந்தது. இந்தத் தகவல் உடனடியாக டெல்லி போலீசாருக்குத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, டெல்லி வட மாவட்ட போலீசார் செங்கோட்டைப் பகுதியில் தீவிர சோதனை நடத்தினர். இறுதியில், இந்த மிரட்டல் அழைப்பு வெறும் புரளி என்பது உறுதி செய்யப்பட்டது.
டெல்லி தலைமைச் செயலகத்திற்கு மின்னஞ்சல் மூலமாகவும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இது குறித்துத் தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் பாதுகாப்புப் படையினர் அந்த இடத்திற்கு விரைந்து சென்று சோதனையில் ஈடுபட்டனர். மேலும், டெல்லியில் உள்ள இரண்டு பள்ளிகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், வெடிகுண்டு நிபுணர்கள் குழுவினர் அங்கு தீவிர சோதனை நடத்தினர். இந்தச் சோதனைகளில் எவ்வித சந்தேகத்திற்குரிய பொருட்களும் சிக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் டெல்லி செங்கோட்டைப் பகுதியில் நடைபெற்ற கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக, தேசிய புலனாய்வு முகமை தனது தடயவியல் அறிக்கையைச் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இந்த வெடிகுண்டு தாக்குதலில் 11 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக ஏற்கனவே 7,500 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்திருந்த NIA, கடந்த மாதம் மேலும் மூன்று பேர் மீது கூடுதல் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தது. தற்போது இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 9 பேரின் நீதிமன்றக் காவல் ஜூலை 13 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
