தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியைப் பிடித்த பிறகு, அக்கட்சியில் மிக முக்கியமான பொறுப்பான மாவட்டச் செயலாளர் பதவியைப் பிடிப்பதில் அக்கட்சியின் நிர்வாகிகள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இது கட்சியின் தலைமைக்கு ஒரு பெரிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
கட்சி தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே உழைத்து வரும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு ஒரு பக்கம் முக்கியத்துவம் தேவைப்படும் நிலையில், மறுபக்கம் புதிதாகப் பொறுப்பேற்ற அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களுக்கு மாவட்டச் செயலாளர் பதவி வேண்டும் என்று தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
சட்டமன்றத் தேர்தலின் போது மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இல்லாத பலரும் போட்டியிட்டு வெற்றி பெற்று, தற்போது பதவியில் உள்ளனர். அவர்கள், தற்போதுள்ள அதிகாரத்துடன் மாவட்டச் செயலாளர் பொறுப்பும் கிடைத்தால் கட்சியை இன்னும் வலுப்படுத்த முடியும்” எனத் தலைமைக்குக் கோரிக்கை வைத்துள்ளனர்.
மாற்றுக்கட்சிகளில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணையும் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள், கட்சியில் சேரும்போதே தங்களுக்குத் தகுந்த முக்கியப் பொறுப்புகளை வழங்க வேண்டும் என்ற நிபந்தனையுடனேயே நுழைகின்றனர்.
ஆரம்பம் முதலே களத்தில் உழைத்து வரும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள், தங்களை ஓரம் கட்டிவிட்டு புதியவர்களுக்கும், வெற்றி பெற்றவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படுவதாக அதிருப்தியில் உள்ளனர்.
இந்த மூன்று தரப்புக்கும் இடையிலான அதிகாரப் போட்டியில், யாரை நியமிப்பது, யாரைத் தவிர்ப்பது என்பதில் தலைமைத் தரப்பு பெரும் குழப்பத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த மோதல் குறித்து அண்மையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பொதுச்செயலாளர் கடுமையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். பதவிகளைத் தீர்மானிப்பதில் நிலவும் இந்த இழுபறி, வரும் காலங்களில் கட்சியின் உட்கட்டமைப்பில் எந்த மாதிரியான மாற்றங்களைக் கொண்டு வரப்போகிறது என்பதுதான் தற்போதைய அரசியல் வட்டாரத்தின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.
