கோவையில் 10 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆளும் தவெக அரசு மீது உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
கோவை மாவட்டத்தில் 10 வயது சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.சிறுமியின் உடல் மீட்கப்பட்டதிலிருந்து கோவை மக்கள் இரவு பகலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சிறுமியின் குடும்பத்தாருக்கு ஆதரவாக தெருக்களில் இறங்கி கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கண்ணீர் மல்க அழுதுகொண்டிருக்கும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி மக்களின் கோபத்தை அதிகரித்துள்ளது.இந்த நிலையில், திமுக இளைஞர் அணி தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் ஆழ்ந்த வேதனையை வெளிப்படுத்தினார்.
“கோவையில் 10 வயது சிறுமி கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இந்த மிருகத்தனமான செயலைச் செய்த குற்றவாளிகளுக்கு விரைவில் கடுமையான தண்டனை வழங்க வேண்டும்” என அவர் கூறியுள்ளார். மேலும், “இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்தக் கொடூர சம்பவத்தைக் கண்டித்து கோவை மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். சிறுமியின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்து, திமுக அவர்களுக்கு துணையாக நிற்கும்” என்றும் உதயநிதி தெரிவித்தார்.
புதிய அரசு பொறுப்பேற்று வெறும் 12 நாட்களுக்குள் பாலியல் வன்கொடுமை, கஞ்சா கடத்தல், ரவுடிகள் தாக்குதல், ஆளுங்கட்சியினரின் அத்துமீறல்கள் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட பெரிய சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். “இது மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலையை மிகவும் கேள்விக்குறியாக்கியுள்ளது” என உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டினார். “இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க சட்டம் ஒழுங்குக்கு முதல் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்” என முதல்வர் விஜய்யை அவர் வலியுறுத்தி கேட்டுக்கொண்டுள்ளார்.
