அரசு அதிகாரிகளின் ஆணவமும், அராஜகமும் ஓர் அழகான குடும்பத்தை சிதைத்து விட்டதாக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வேதனை தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு, நாகர்கோவில் சிறையில் போலீசாரால் அநியாயமாக அடித்துக் கொல்லப்பட்ட விசாரணைக் கைதி சபரி வர்மனின் இல்லத்திற்கு சென்ற பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அவரது குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், தந்தையின் மரணத்தை புரிந்து கொள்ளக் கூட முடியாத வயதில் இருக்கும், சபரி வர்மனின் சிறுவயது மகனையும், வாழ வேண்டிய வயதில் மகனை இழந்து தவிக்கும் அவரது வயதான பெற்றோர்களையும், கனவுகள் கலைந்து இன்று தனிமரமாக நிற்கும் அவரது மனைவியையும் பார்க்கையில் நெஞ்சம் கனத்துப் போனதாக வேதனை தெரிவித்துள்ளார்.
அரசு அதிகாரிகளின் ஆணவமும், அராஜகமும் ஓர் அழகான குடும்பத்தை எப்படியெல்லாம் சிதைத்து விடும் என்பதற்கு, அவலச் சான்றாக நிற்கும் இக்குடும்பத்தை, அரசு எப்பொழுதும் கைவிட்டு விடக் கூடாது என கோரிக்கை விடுத்துள்ள நயினார் நாகேந்திரன், இனியொரு முறை இதுபோன்ற லாக்-அப் மரணம் நிகழவும் அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தியுள்ளார்.
குற்றவாளிகளை தண்டிக்கும் பொறுப்பும், கடமையும் நீதிமன்றங்களுக்கே உண்டு என்பதை தமிழகக் காவல்துறைக்கு முதல்வர் விஜய் அழுத்தமாக உணர்த்த வேண்டும்! தமிழகக் காவல்நிலையங்களில் தொடரும் தனிமனித உரிமை மீறல்களையும் கட்டுப்படுத்த வேண்டும் என நயினார் நாகேந்திரன் அறிவுறுத்தியுள்ளார்.
