“ஒரு துளி ரத்தம்… ஆனால், அது ஒரு உயிரின் துடிப்பு! உலகெங்கும் வாழும் கோடிக்கணக்கான மனிதர்களுக்கு, இந்த உலகில் மறுபிறப்பு வழங்கும் அந்த அற்புதமான கொடைதான் ‘ரத்த தானம்’.”
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 14-ஆம் தேதியை, உலகம் முழுவதும் ‘உலக ரத்த தான தினமாக’ நாம் கடைபிடிக்கப்படுகிறது. ஏனென்றால், 1901ம் ஆண்டு ரத்த வகைப்பாட்டைக் கண்டறிந்து, மருத்துவ உலகிற்குப் பெரும் புரட்சியை ஏற்படுத்திய கார்ல் லான்ட்ஸ்டெய்னர் (Karl Landsteiner) அவர்களின் பிறந்தநாளைக் கௌரவிக்கும் விதமாகவே இந்த நாள் தேர்ந்தெடுக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இவர் இரத்தக் குழு அமைப்பை (A, B, AB, O) கண்டுபிடித்தார். இது இரத்த தானம் மற்றும் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு இரத்தமாற்றம் துறையில் ஒரு முக்கியமான பங்களிப்பாகும். இந்தப் பங்களிப்புக்காக கார்ல் லேண்ட்ஸ்டெய்னருக்கு 1930 இல் நோபல் பரிசு வழங்கப்பட்டது.
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, இந்த ஆண்டுக்கான கருப்பொருள், “One Drop of Humanity. Give Blood. Save Lives.”, “மனிதநேயத்தின் ஒரு துளி. ரத்த தானம் செய்வோம். உயிர்களைக் காப்போம்.” என்பதாகும். இது ஒவ்வொரு ரத்த தானத்திலும் மனிதநேயத்தை மையப்படுத்துகிறது.
ஒவ்வொரு தானமும் ஒரு மருத்துவச் செயல் மட்டுமல்ல, அது ஒற்றுமை, கருணை மற்றும் கூட்டுப் பொறுப்பின் ஒரு சக்திவாய்ந்த வெளிப்பாடு என்பதை இது நமக்கு நினைவூட்டுகிறது. முழு மனிதநேயமும் ஒரு துளியில் பிரதிபலிக்க முடியும் என்ற சிந்தனையால் ஈர்க்கப்பட்ட இந்த கருப்பொருள், ஒவ்வொரு தானமும் நம் அனைவரையும் இணைக்கும் மற்றும் பாதுகாக்கும் ஒரு உயிர்நாடியை உருவாக்க எப்படி உதவுகிறது என்பதை முன்னிலைப்படுத்துகிறது.
விபத்துகள், அறுவை சிகிச்சைகள், பிரசவ கால சிக்கல்கள், மற்றும் புற்றுநோய் போன்ற தீவிர பாதிப்புகளுக்கு உள்ளானவர்களுக்கு, ஒருவரின் ரத்தம் என்பது வெறும் திரவம் அல்ல; அது அவர்களின் வாழ்வாதாரம், அந்த குடும்பத்தின் நம்பிக்கையின் ஒளியாக கருதப்படுகிறது.
இன்றைய நவீன உலகில், ரத்தத்திற்கு மாற்றாக செயற்கையாக எதையும் நம்மால் உருவாக்க முடியவில்லை. மனித ரத்தத்திற்கு ஒரே மாற்று, மற்றொரு மனிதனின் ஈகைப் பண்பு மட்டுமே. இலவசமாக, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், ஒரு உயிர் காக்க நாம் கொடுக்கும் அந்த ஒரு யூனிட் ரத்தம், மூன்று உயிர்களைக் காக்கும் ஆற்றல் கொண்டது என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?.
ஆரோக்கியமான ஒவ்வொரு மனிதனும், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ரத்த தானம் செய்வதால், யாருக்கும் எந்தப் பாதிப்பும் இல்லை. மாறாக, உங்கள் உடலில் புதிய ரத்த செல்கள் உற்பத்தி செய்யப்பட்டு, உங்கள் ஆரோக்கியமும் மேலோங்குகிறது. உயிரைக் காக்கும் இந்த உன்னதப் பணியைச் செய்ய, உங்களுக்குப் பெரிய வசதி தேவையில்லை… தேவையெல்லாம் பிறருக்கு உதவ வேண்டும் என்ற அந்த உயரிய எண்ணம் மட்டும் இருந்தால் போதும்.
மறக்காதீர்கள்! நீங்கள் கொடுக்கும் அந்த ஒரு துளி ரத்தம், யாரோ ஒருவரின் கண்ணீரைத் துடைக்கும்… ஒரு குழந்தையின் சிரிப்பை மீட்டெடுக்கும்… ஒரு குடும்பத்தின் விளக்கை அணையாமல் காக்கும்! வாருங்கள், இந்த உலக ரத்த தான தினத்தில், நாமும் ரத்த தானம் செய்வோம் என்று உறுதி ஏற்போம்! உயிரைக் காக்கும் உன்னதக் கொடையாளிகளாக மாறுவோம்.
