நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் பிரச்சாரப் பொதுக்கூட்டம் ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே உள்ள விஜயபுரி அம்மன் கோவிலுக்குச் சொந்தமான இடத்தில், வரும் டிசம்பர் 18ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில், கட்சியின் தலைவர் விஜய் கலந்துகொண்டு பேச இருக்கிறார்.

கோவில் நிலத்தில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி தவெக. சார்பில் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜாதாவிடம் மனு அளிக்கப்பட்டது. இதற்கிடையே, கடந்த டிசம்பர் 12ஆம் தேதி, கோவிலின் செயல் அலுவலர் தனலட்சுமி, கோவில் நிலத்தில் தவெக உட்பட எந்த அரசியல் கட்சிகளுக்கும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி அளிக்கக்கூடாது என்று மாவட்ட ஆட்சியர் கந்தசாமி மற்றும் மாவட்ட காவல் துறைக்குக் கடிதம் அனுப்பியிருந்தார். இதனால், குறிப்பிட்ட இடத்தில் பொதுக்கூட்டம் நடத்துவதில் சில நாட்கள் இழுபறி நீடித்தது.

இந்த இழுபறி நிலைக்கு மத்தியில், விஜயபுரி அம்மன் கோவிலுக்குச் சொந்தமான 21 ஏக்கர் நிலத்தில் தவெக பொதுக்கூட்டம் நடத்த இறுதியாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறையின் செயல் அலுவலர் தனலட்சுமி விளக்கம் அளித்துள்ளார்.

அவர் கூறுகையில், “விஜய் பிரச்சாரம் செய்ய வைப்புத் தொகையாக ரூ.50 ஆயிரம் மற்றும் பிரச்சாரம் செய்ய அனுமதி கட்டணமாக ரூ.50 ஆயிரம் என மொத்தம் ரூ.1 லட்சம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்திருந்தோம். அந்தக் கட்டணத்தை அவர்கள் செலுத்திவிட்டார்கள். மேலும், கூட்டம் முடிந்ததும் கோவில் இடத்தை முழுமையாகச் சுத்தம் செய்து தருவதாகவும் உறுதியளித்துள்ளனர்” என்று அவர் கூறினார். இதையடுத்து, தவெக-வின் பொதுக்கூட்டம் திட்டமிட்டபடி நடைபெறுவது உறுதியாகியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version