மகாராஷ்டிரா முதலமைச்சர் குறித்து வெளியிடப்பட்ட செய்தி ஒன்றுக்கு, கூச்சமே இல்லையா என தமிழ்நாடு எம்.பி ஜோதிமணி கடுமை காட்டியுள்ளார்.

மகராஷ்டிரா முதலமைச்சரான பாஜகவைச் சேர்ந்த தேவேந்திர பட்னாவிஷ், பிரதமர் நரேந்திர மோடியின் கோரிக்கையை ஏற்று எரிபொருள் பயன்பாட்டைக் குறைத்துள்ளார். அவர் விமானத்தில் வணிக வகுப்பில்( Business Class) பயணம் செய்யாமல் எகனாமி வகுப்பில் பயணம் செய்தார் என செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இந்த செய்தியைச் சுட்டிக்காட்டித்தான் காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி, இப்படியெல்லாம் செய்தி வெளியிட கூச்சமே இல்லையா என தனது சமூக வலைத்தளத்தில் கடுமை காட்டி பதிந்துள்ளார்.

அவர் தனது பதிவில், இன்று பல்வேறு ஊடகங்கள் மோடியின் கோரிக்கையை ஏற்று எரிபொருள் பயன்பாட்டை குறைக்க மகாராஷ்டிர முதலமைச்சர் திரு. தேவேந்திர பட்னவிஷ் அவர்கள் வணிக வகுப்பில் ( Business Class) பயணம் செய்யாமல் எகானமி வகுப்பில் பயணம் செய்தார் என்று கூச்சமே இல்லாமல் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளனர்.

ஒரு விமானம் பறக்கும் போது எகானமி வகுப்புக்கு ஒரு விதமாகவும், வணிக வகுப்பிற்கு ஒரு விதமாகவுமா எரிபொருள் செல்வாகும் என்று எந்த ஊடகமும் கேள்வி கேட்கவில்லை. மாறாக அதை ஒரு தியாகம் போல சித்தரித்து செய்தி வெளியிடுகிறாகள்.

மோடிக்கு PR வேலை பார்ப்பதும், மக்களை முட்டாளாக்குவதும்தான் இன்றைய சூழலில் பெரும்பாலான ஊடகங்களின் தலையாயப் பணி. பெரும்பாலான ஊடகங்கள் எந்த அளவிற்கு தரம்தாழ்ந்து செய்திகளை வெளியிடுகின்றன என்பதற்கு இதுவே ஒரு சாட்சி. ஊடக அறத்தின் வீழ்ச்சி உச்சகட்டத்தை எட்டியுள்ள ஒரு காலச்சூழலில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். நாம் தான் நாம் பார்க்கின்ற,படிக்கின்ற செய்திகள் பற்றி விழிப்போடு இருக்கவேண்டும்.

இவ்வாறு ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version