பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-

மேட்டூர் அணையின் நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்து வருவதாலும்,  தென்மேற்கு பருவமழை  தீவிரமடைவதற்கான வாய்ப்புகள் தென்படாததாலும்  காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்படாது என்பது உறுதியாகி விட்டது.

இத்தகைய சூழலில் நிலத்தடி நீரைப் பயன்படுத்தி குறுவை சாகுபடி  செய்யத் தேவையான உதவிகளை தமிழக அரசு வழங்க வேண்டும்.

தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். ஆனால், 93.47 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட மேட்டூர் அணையில், இன்றைய நிலவரப்படி வெறும் 41.60 டி.எம்.சி, அதாவது 79 அடி மட்டுமே தண்ணீர் உள்ளது.

எனவே நடப்பாண்டில் உரிய காலத்தில் மேட்டூர் அணை திறக்கப்படா விட்டால், குறுவை நெல் சாகுபடி செய்யப்படும் பரப்பு 3 லட்சம் ஏக்கருக்கும் கீழாக குறைந்து விடும். இதனால் உழவர்களுக்கு வருவாய் இழப்பும், தொழிலாளர்களுக்கு வேலையிழப்பும் ஏற்படும்.

இந்த பாதிப்புகளை ஓரளவுக்காவது கட்டுப்படுத்த வேண்டும் என்றால் நிலத்தடி நீரை  பயன்படுத்தி குறுவை சாகுபடி செய்வதும், அதற்காக உழவர்களுக்கு உதவ வேண்டியதும் அரசின் கடமை ஆகும்.

இதற்காக  காவிரி பாசன மாவட்டங்கள் உள்பட  தமிழகம் முழுவதும் உள்ள  உழவர்களுக்கு விதைகள், உரங்கள், நுண்ணூட்ட சத்துகள் உள்ளிட்டவற்றை மானியத்தில் வழங்கும் குறுவைத் தொகுப்புத் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும்.

கடந்த ஆட்சியில் ஒரு லட்சம் ஏக்கருக்கு மட்டுமே குறுவைத் தொகுப்பு வழங்கப்பட்ட நிலையில், நடப்பாண்டில் உச்சவரம்பின்றி அனைவருக்கும் குறுவைத் தொகுப்பு வழங்கப்பட வேண்டும்.

அத்துடன்  24 மணி நேரமும் தடையற்ற மும்முனை மின்சாரம் வழங்கவும்,  இடுபொருள் மானியமாக  ஏக்கருக்கு  ரூ.5,000 வீதம்  வழங்கவும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை  எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version