18-வது ஐபிஎல் தொடர் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. பஹல்காம் தாக்குதால் நிறுத்தி வைக்கப்பட்ட போட்டிகள் மீண்டும் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. 10 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில், நேற்றிரவு (20.05.2025) நடைபெற்ற 61-வது லீக் சுற்றில் லக்னோ-ஐதராபாத் அணிகள் மோதின.

டாஸ் வென்ற ஐதராபாத் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த லக்னோ, 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக மார்ஷ் 65 ரன்களும், மார்க்ரம் 61 ரன்களும் அடித்தனர். ஐதராபாத் தரப்பில் இஷான் மலிங்கா 2 விக்கெட்டும், ஹர்ஷல் படேல், நிதிஷ்குமார், ஹர்ஷ் துபே ஆகியோர் தலா ஒரு விகெட்டும் கைப்பற்றினர்.

206 என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஐதராபாத் அணி, 28.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் அடித்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 59 ரன்கள் அடித்தார். அதேப் போல லக்னோ தரப்பில் திக்வேஷ் ரதி 2 விக்கெட்கள் வீழ்த்தினார். இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற கட்டத்தில் இருந்த லக்னோ, தோல்வி அடைந்ததால், லீக் சுற்றில் இருந்து வெளியேறியது.

தோல்விக்கு பிறகு பேசிய லக்னோ அணி கேப்டன் ரிஷப் பந்த், “நிச்சயமாக இது எங்கள் சிறந்த சீசன்களில் ஒன்றாக இருந்திருக்கலாம். ஆனால் போட்டிக்குள் வரும்போது அணியில் நிறைய இடைவெளிகளை நாங்கள் நிரப்ப வேண்டியிருந்தது. ஒரு அணியாக அதைப் பற்றி பேசக்கூடாது என்று நாங்கள் முடிவு செய்தோம். ஆனால் அந்த இடைவெளிகளை நிரப்புவது கடினமாகிவிட்டது. ஏலத்தில் நாங்கள் திட்டமிட்ட பவுலர்களுடன் விளையாடியிருந்தால் கதை வேறு மாதிரி இருந்திருக்கும்.

சில நேரங்களில் விஷயங்கள் உங்கள் வழியில் செல்லும். சில நேரங்களில் செல்லாது. எனவே நாங்கள் இதுவரை விளையாடிய விதத்தில் பெருமையை எடுத்துக் கொள்கிறோம். மேலும் இந்த வருடம் கிடைத்த நேர்மறையான விஷயங்களைப் பார்க்கிறோம். எங்களிடம் வலுவான பேட்டிங் இருக்கிறது. சொல்லப்போனால் சில நேரங்களில் பவுலர்களும் சிறப்பாக பவுலிங் செய்தனர். அதை வைத்து நாங்கள் சிறந்த செயல்பாடுகளை கொடுக்க முயற்சி செய்தோம்.

இந்த ஆட்டத்தை பொறுத்த வரை நாங்கள் 10 ரன்கள் குறைவாக எடுத்தோம் என்பது எங்களுக்குத் தெரியும். சீசனின் முதல் பாதியில் நாங்கள் மிகவும் நன்றாக விளையாடினோம். ஆனால் இரண்டாவது பாதி கடினமாக மாறியது. பந்துவீச்சாளர் ரதி நன்றாக விளையாடியுள்ளார். இது அவருக்கு முதல் சீசன். ஆனால் முதல் வருடத்திலேயே அவர் பவுலிங் செய்த விதத்தைப் பார்ப்பது நன்றாக இருக்கிறது. அவர் எங்களுடைய நேர்மறையான விஷயங்களில் ஒருவர். ஆனால் நீங்கள் உங்களை தொடர்ந்து மேம்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று கூறினார்.

Share.
Leave A Reply

Exit mobile version