பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் காமராஜரின் உருவத்துடன் கூடிய மணல் சிற்பம் அமைக்கப்பட்டது.

உலகப் புகழ்பெற்ற மணல் சிற்பக் கலைஞர் கஜேந்திரன் ஏழுமலையான் வடிவமைத்த இந்த சிற்பத்தை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் முன்னாள் மாநிலத் தலைவர்கள் கே.வி. தங்கபாலு, கே.எஸ். அழகிரி, பிரவீன் சக்கரவர்த்தி, விஜய் வசந்த், அமைச்சர் ராஜேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாணிக்கம் தாகூர், “ஆர்.எஸ்.எஸ். அரசியலின் தமிழாக்கம்தான் அண்ணாமலை செய்து வரும் அரசியல். அது மிகவும் ஆபத்தான அரசியல்” என்று கடுமையாக விமர்சித்தார்.

மேலும், பள்ளிகளில் அரசியல் மற்றும் தேவையற்ற நிகழ்ச்சிகளைத் தடை செய்ய வேண்டும் என்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் கருத்தை வரவேற்ற அவர், “காமராஜர் உருவாக்கிய அரசு பள்ளிகளில் ஒன்று கூட மூடப்படக் கூடாது. எந்த பள்ளி மூடப்பட்டாலும் அதை துக்க நாளாகவே பார்ப்பேன்” என்றார்.

மேகதாது அணை விவகாரம் குறித்து பேசிய அவர், “தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் மத்திய அரசு மேகதாது அணைக்கு அனுமதி வழங்கக் கூடாது. பிரதமர் மோடியின் அனுமதியின்றி கர்நாடக அரசு அணையை கட்ட முடியாது” என்றார்.

மேலும், “மேகதாது அணை கட்டுவதற்கு ஒரு செங்கல் கூட வைக்க அனுமதிக்கக் கூடாது என்பதில் தமிழ்நாடு காங்கிரஸ் உறுதியாக உள்ளது. இந்த விவகாரத்தில் யாரும் அரசியல் செய்யக் கூடாது; தமிழகத்தின் நீர் உரிமையை பாதுகாக்க தொடர்ந்து போராடுவோம்” என்றும் தெரிவித்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version