தான் போட்டியிட்டு வெற்றி பெற்ற சென்னை, பெரம்பூர் தொகுதிக்கு தேர்தல் வெற்றிக்குப் பின்னர் இன்று முதன்முறையாக வருகை தந்த முதலமைச்சர் விஜய், அங்கு புதிதாக அமைக்கப்பட்ட எம்.எல்.ஏ அலுவலகத்தையும், இ-சேவை மையத்தையும் திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, சென்னை பெரம்பூர் தொகுதிக்குட்பட்ட சர்மா நகர் 10ஆவது தெருவில் உள்ள சிந்தாமணி கூட்டுறவு நியாய விலைக் கடையில் ஆய்வு மேற்கொண்டு பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
பின்னர், தமிழ்நாடு முழுவதும் 73 ஆயிரம் பேருக்கு புதிய ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைத்து 50 புதிய குடும்ப அட்டைதாரர்களுக்கு புதிய அட்டைகளை வழங்கி பத்து நபர்களுக்கு ரேஷன் பொருட்களை முதலமைச்சர் விஜய் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ரமணன், தமிழகம் முழுவதும் இரண்டு வாரங்களுக்குள் புதிய குடும்ப அட்டைகள் வழங்கும் பணி நிறைவு செய்யப்படும் என்றார்.
மேலும், 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு “தாயுமானவன்” திட்டத்தின் கீழ் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாகவும், எதிர்காலத்தில் அனைத்து குடும்பங்களுக்கும் வீடு தேடி ரேஷன் வழங்குவது குறித்து ஆய்வு நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
