புதுச்சேரியில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு திரிபுரசுந்தரி சமேத ஸ்ரீ வேதபுரீஸ்வரர் ஆலயத்தில் திருத்தேரோட்டம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.
காந்தி வீதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு திரிபுரசுந்தரி சமேத ஸ்ரீ வேதபுரீஸ்வரர் ஆலயத்தில், 40-வது ஆண்டு மகோத்ஸவ விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று (மே 30) வெகு விமரிசையாக நடைபெற்றது.
ஸ்ரீ பராபவ வருஷத்திய 40-வது ஆண்டு மகோத்ஸவ விழா, கடந்த 22-ம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, கடந்த சில நாட்களாக ரிஷப வாகனம், நாக வாகனம் மற்றும் பூத வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

விழாவின் சிகர நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று (மே 30) காலை நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் வேதபுரீஸ்வரர் எழுந்தருள, நூற்றுக்கணக்கான பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் “ஓம் நமச்சிவாயா” எனும் முழக்கமிட்டு தேரினை வடம் பிடித்து இழுத்தனர். முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த இந்தத் தேர் ஊர்வலம், பக்தர்களுக்குப் பெரும் அருட்செய்தியாக அமைந்தது.

விழாவிற்கான ஏற்பாடுகளைக் கோயில் நிர்வாகத்தினர் மற்றும் விழாக் குழுவினர் சிறப்பாகச் செய்திருந்தனர். திருத் தேரோட்டத்தைக் காணக் காந்தி வீதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் திரளான பக்தர்கள் திரண்டிருந்தனர்.
