முதியோர் ஓய்வூதியம் ரூ.2,000-ஆக உயர்த்தப்படும், வங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகள் அடங்கிய 2ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது. கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி,  இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார்.  
அதில், முதியோர் உதவித்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும்:
சமூக ஓய்வூதிய திட்டத்தின்கீழ் முதியோர்களுக்கு, முதியோர் உதவித் தொகை வழங்கப்படும். மேலும், முதியோர் விதவைப் பெண்கள், முதிர் கன்னிகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் ரூ.1,200-ல் இருந்து ரூ.2000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
வங்கிகளில் பெற்ற கல்விக்கடன் தள்ளுபடி: மாணவர்கள், பெற்றோர்கள் நலன் காக்கும் பொருட்டு வங்கிகளில் பெற்ற கல்விக்கடனை தள்ளுபடி செய்யும் வகையில், அந்த தொகையை அரசே ஏற்கும்.
ஆண்டுக்கு 3 கேஸ் சிலிண்டர்கள் இலவசம்: வாழ்வாதார உதவியாக, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆண்டுக்கு மூன்று கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும்.
ஜல்லிக்கட்டு: ஜல்லிக்கட்டு போட்டியின் போது வீரர் உயிரிழந்தால் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும். ஜல்லிக்கட்டின் போது படுகாயமடைந்தால் ரூ.2 லட்சம் வழங்கப்படும்.
அரசாணை வழங்கப்பட்ட இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளை எழுச்சியோடு நடத்துவதற்கு அரசின் சார்பில் மானியமாக ரூ.5 லட்சம் வழங்கப்படும்.
ஜல்லிக்கட்டுப்போட்டி நடத்துவதற்காக, தற்போது கடைபிடிக்கப்பட்டு வரும் ஆன்லைன் முறை ரத்து செய்யப்படும். ஏற்கனவே இருந்த பழைய நடைமுறையே பின்பற்றப்படும்.
கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன் தள்ளுபடி: இஸ்லாமிய, கிறிஸ்தவ மற்றும் ஏனைய சிறுபான்மையின வகுப்பை சேர்ந்த மகளிர் சுய தொழில் தொடங்குவதற்கு வட்டியில்லா கடன் வழங்கப்படும்.
மாற்றுத்திறனாளிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும்.
Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version