அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டங்கள், பேரணி மற்றும் பிரச்சாரம் நடத்துவதற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு அரசாணையாக வெளியிட்டுள்ளது.
தவெக தலைவர் விஜய்யின் கரூர் மக்கள் சந்திப்பின் போது ஏற்பட்ட துயரத்தின் தொடர்ச்சியாக அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்களுக்கு விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த வழக்கின் விசாரணையில் பிறப்பித்த உத்தரவின் படி தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை கலந்து ஆலோசித்து விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு தற்போது அரசாணையாக வெளியிட்டுள்ளது. அதில் பொதுக்கூட்டங்கள், பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் மற்றும் ரோடு ஷோக்களில் அரசியல் கட்சிகள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.
நிகழ்ச்சி தொடங்கும் தேதி, இடம், நேரம் ஆகியவற்றோடு நிகழ்ச்சியின் நோக்கம் குறித்தும் தெரிவிக்க வேண்டும். எதிர்பார்க்கப்படும் அதிகபட்ச கூட்டம், கலந்துகொள்ளும் சிறப்பு விருந்தினர்கள், பேச்சாளர்களின் எண்ணிக்கையை குறிப்பிட வேண்டும். எதிர்பார்க்கப்படும் கூட்டத்திற்கு ஏற்ப ஏற்பாடு செய்வதோடு, பங்கேற்பாளர்கள் நூறுபேருக்கு ஒரு தன்னார்வலர் நியமிக்கப்பட வேண்டும்,
கூட்டத்தில் பங்கேற்பாளர்களுக்கு குடிநீர், உணவு, நடமாடும் கழிப்பறைகள் ஆகியவற்றை ஏற்படுத்த வேண்டும் . நிகழ்ச்சி முடிந்த பின்பு கூட்டம் பாதுகாப்பான முறையில் கலைந்து செல்வதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். அவசரத் தயார் நிலை, மருத்துவ மீட்பு, தீயணைப்பு வாகனங்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும்
சட்டம் ஒழுங்கை பேணிக்காத்து தேவையற்ற மற்றும் விரும்பத்தகாத சம்பவங்கள் அரங்கேறுவதை தடுக்க வேண்டும். வருவாய்த்துறை நிகழ்வை முழுமையாக கண்காணிபதோடு, காவல்துறை, மருத்துவத்துறை, பொதுப்பணித்துறை, மின்சாரத்துறை என அந்தந்த துறை அதிகாரிகள் அந்தந்த பணிகளை கண்காணிக்க வேண்டும்.
நிகழ்வு நடைபெற்ற பின்பு பாதுகாப்பு கண்காணிப்புக் குழு நிகழ்வு நடைபெற்ற இடத்தில் ஆய்வு செய்ய வேண்டும் . நிகழ்வுக்கான விதிக்கப்பட்ட விதிமுறைகளை பின்பற்றியது தொடர்பாகவும், அங்கு ஏற்பட்ட சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் தொடர்பாகவும் அறிக்கை வழங்க வேண்டும்
நிகழ்வுக்கு பின் தாக்கல் செய்யப்படும் அறிக்கையில் குறைபாடுகள் இருப்பின் பொதுச்சொத்து சேதம் மற்றும் இழப்பு தடுப்பு விதிகளின் கீழ் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
