கவின் ஆணவக் கொலை வழக்கில், குற்றவாளி சுர்ஜித் அழுதுகொண்டே நீதிமன்றத்தில் ஆஜரானார்.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகேயுள்ள ஆறுமுகமங்கலத்தை சேர்ந்த கவின் செல்வகணேஷ் என்ற 27 வயது நபர், சென்னை ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 27-ம் தேதி பாளையங்கோட்டை கே.டி.சி.நகரில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், நடத்திய விசாரணையில், அதேப் பகுதியை சேர்ந்த சப் இன்ஸ்பெக்டர் சரவணன் என்பவரது மகளும் சித்த மருத்துவரான சுபாஷினி என்பவரை கவின் காதலித்து வந்தது தெரியவந்துள்ளது. இது பிடிக்காததால், சுபாஷினியின் சகோதரர் சுர்ஜித் அவரை வெட்டிக் கொலை செய்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து போலீசார் சுர்ஜித், சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். சுர்ஜித்தின் தாயார் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமாரி மீதும் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர். இந்த வழக்கு தற்போது சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் கடந்த சில நாட்களாக பல்வேறு கோணங்களில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிபிசிஐடி போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி வரும் நிலையில், சுர்ஜித்தை காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர். இதுதொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜ்குமார் நவ்ரோஜ் நெல்லை இரண்டாவது கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
இந்த வழக்கு விசாரணை இன்று நடந்த போது, சுர்ஜித் மற்றும் அவரது தந்தை சரவனன் ஆகியோர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர். அப்போது சுர்ஜித் அழுதுகொண்டே நீதிமன்றத்தில் ஆஜரானார். இந்த வழக்கை வரும் 11-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ஹேமா உத்தரவிட்ட நிலையில், இருவரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.